நீதியரசரை நீக்கவும் இல்லை! புதியவரை நியமிக்கவும் இல்லை!! பாராளுமன்றத்தில் ரணில்
பிரதம நீதியரசர் மற்றும் பிரதம நீதியரசரை அச்சுறுத்தியமை ஆகிய இரண்டு விவகாரம் தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் நாளை பதிலளிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை பாராளுன்றத்தில் தெரிவித்தார்.
பிரதம நீதியரசரை நாங்கள் நீக்கவும் இல்லை, புதிய ஒருவரை அப்பதவிக்கு நியமிக்கவும் இல்லை. இவையிரண்டும் பொய்யானது. இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பிலும் நான், நாளை பதிலளிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றம் கூடியபோது வரவு செலவுத் திட்ட உரைக்கு முன்னர் உரையாற்றிய அவர், 100 நாட்கள் வேலைத்திட்டத்தை நிறைவேற்றும் சவால்மிக்க நடவடிக்கையில் இரவு பகல் பாராது உழைத்து வருவதாக தெரிவித்தார்.
நாம் செய்யும் வேலையையே பார்க்க வேண்டும். தவிர, நாட்கள் குறித்து எண்ணிக்கொண்டிருக்க கூடாது என்றும் பிரதமர் கூறினார். தனது உரைக்குப் பின்னர், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால், இடைக்கால வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.
நிறைவேற்று அதிகாரத்தைப் போன்று, குடும்ப ஆட்சியையும் நாம் ஒழித்துள்ளோம் என்றும் சுட்டிக்காட்டிய அவர், நிறைவேற்று அதிகார முறைமைக்கு பதிலாக வேறு வழியை உருவாக்க அரசியலமைப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 100 நாள் திட்டத்தின் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்றுக்கு அறிவிப்போம்.
கசினோ, எதனோல், குடும்பவாதம் காரணமாக ஊழல் மோசடிகள் உருவாகியுள்ளன. அவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கசினோ வேலைத்திட்டங்கள் அனைத்தையும் தடை செய்ய வர்த்தமானி அறிவித்தல் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். 14 நாட்களுக்குள் பாரிய நடவடிக்கைகளைச் செய்து உலக சாதனை புரிந்துள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஒழுக்கமானதொரு அரசாங்கத்தையே நாம் நடத்தி வருகின்றோம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.