செய்திகள்

நீதி கோரும் தமிழர் அரசியலின் தோல்வி ?

யதீந்திரா

முள்ளிவாய்க்கால் அவலம் இடம்பெற்று 14 வருடங்கள். முள்ளிவாய்க்கால் என்பது, ஒரு ஆயுத போராட்டத்தின் தோல்வியின் விளைவாகும். இந்த பின்புலத்தில் முள்ளிவாய்க்காலை நினைவு கொள்வதென்பது, இன்னொரு வகையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை, அழிவையும் நினைவுபடுத்துவதாகும். 2010இல், இந்தக் கட்டுரையாளர், பின்வருமாறு எழுதியிருந்தார். அதாவது, இலங்கையில் ஒரு மனிதப் பேரவலம் நிகழ்ந்தது பற்றி, அதிகம் எழுதி ஓய்ந்துவிட்டது. முன்வைக்கப்பட்ட கண்டனங்களும் ஏராளம்.

“அவர் – இவர் எனப் பலர் வரக்கூடும் என ஊட்டப்பட்ட நம்பிக்கைகளும் அலாதியானவை. இறுதியில் நடந்தது எதுவுமில்லை. இனி முள்ளிவாய்க்காலை நினைவு கூர்ந்து வருடங்கள் தோறும் நாம் கல்லறைகளுக்கு வெள்ளையடித்து நம் துயரை போக்கிக் கொள்ளலாம். பெரும்பாலான சந்தர்பங்களில் நம் மீது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்கு முறைக்கு எதிரான நினைவு தினங்கள் அனைத்தும் இயலாமையின் வெளிப்பாடாக இருந்திருக்கின்றனவே தவிர செயலுக்கான அணிச் சேர்க்கையாக, செயலுக்கான முனைப்பாக இருந்ததில்லை. இந்த வரிகள் அடங்கிய கட்டுரை, ‘நீதியும் நவீன அரசியலும் ‘என்னும் தலைப்பில், ‘காலத்துயரும் காலத்தின் சாட்சியும்’ என்னும் தலைப்பிலான, எனது நூலிலும் இடம்பெற்றது.

யுத்தத்திற்கு பின்னரான கடந்த 14 வருடங்களில், இந்த எதிர்கூறலை தாண்டி, இன்னும் தமிழ் தேசிய அரசியல் பயணிக்கவில்லை. இது எனது எழுத்தின் வெற்றியெனலாம் ஆனால் மக்களின் நிலையில் ஒரு மோசமான தோல்வியாகும். ஏனெனில் கடந்த 14 வருடங்களில் தமிழ் தேசிய அரசியலால் முன்நோக்கி பயணிக்க முடியவில்லை. 2009இற்கு பின்னர், தமிழ் தேசிய அரசியலை தாங்கிப் பிடிப்பவர்களாக நம்பப்பட்ட அனைவருமே இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.

இப்போது தமிழ் தேசிய அரசியல் முள்ளிவாய்க்கால் கஞ்சியில் திருப்திகாண்கின்றது. ஆனால் மக்களை பொறுத்தவரையில் இவற்றை சாதாரணமாக கடந்து செல்வதாகவே தெரிகின்றது. சித்திரா பருவதத்திற்கு கஞ்சி குடிப்பதற்கும், இதற்கும் பெரிய வேறுபாடுகளை காணமுடியவில்லை. ஏனெனில் அரசியல் தலைமையற்ற சமூகமொன்றில் எவ்வாறான நிகழ்வுகளை முன்னெடுத்தாலும் கூட, அதற்கு அரசியல் பெறுமதியிருக்கப் போவதில்லை. தமிழர் அரசியல் கடந்த காலத்தின் மீதான பரிவுணர்விற்கும், கடந்து சொல் வேண்டிய அரசியல் உண்மைகளுக்கும் இடையில் சிக்கிக் கிடக்கின்றது.

இந்த விடயத்தை பலரால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை, புரிந்துகொண்டவர்களால் துனிகரமாக பேசமுடியவில்லை. இந்த பின்புலத்தில் நோக்கினால் 2009இற்கு பின்னரான நமது தமிழ் தேசிய அரசியல் ஆய்வுகளில் வறுமை குடிகொண்டுள்ளது. யதார்த்தங்களை எதிர்கொள்ள முடியாமல், நமது ஆய்வாளர்கள் என்போர் பலர் தடுமாறிக் கொண்டேயிருக்கின்றனர். தமது கருத்துருவாக்கங்கள் தோல்வியுற்றிருக்கின்ற என்பதையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதற்கு ஒரு காரணமுண்டு. எழுதுவதன் மூலம் ஒரு பிரமுக அடையாளம் கிடைத்துவிடுகின்றது. பின்னர் அதனை எப்படியாவது பழுதுபடாமல் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்னும் ஆசையைலிருந்து விடுபட முடியாமல் இருக்கின்றது.

சாதாரண மக்களின் மனநிலை வேறு. அவர்கள் எப்போதும் உணர்சிவசப்பட்டவர்களாகவே இருப்பவர். அதிலும் முப்பது வருடங்களுக்கு மேலான யுத்தச் சூழலொன்றுக்குள் சிக்கியிருந்த மக்கள் கூட்டமொன்றில் இப்போது பலதரப்பட்டவர்கள் இருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்போர் இருக்கின்றனர். விடுதலைப் புலிகள் மீது அனுதாபமுள்ளவர்கள் இருக்கின்றனர். விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து உயிரிழந்தவர்கள் பெற்றோர்கள், உறவினர்கள் என்னுமொரு தொகுதி மக்களுண்டு. விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது கோபமும், விமர்சனமுள்ளவர்கள் இருக்கின்றனர். விடுதலைப் புலிகளை விரும்பாவிட்டாலும் கூட, பொதுவில் ஆதரவாளர்கள் போன்று நடிப்பவர்கள் இருக்கின்றனர். இவை எவற்றிலுமே அக்கறையற்று, தானுண்டு, தங்களின் வாழ்க்கையுண்டு என்றிருப்பவர்கள் இருக்கின்றனர். தமிழ் மக்களில் இவர்களே பெரும்பாண்மையினரவார். ஆனால் யுத்தத்திற்கு பின்னரான கடந்த 14 வருடங்களில் யுத்தகாலத்தின் நினைவுகளிலிருந்து அதிகமான பெரும்பாண்மையான மக்கள் வெளியில் வந்துவிட்டனர். இதற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளே சிறந்த உதாரணம். யுத்தத்தின் அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை அரசியல் கட்சிகளுக்கு இருந்தாலும் கூட, சாதாரண மக்களோ அதிலிருந்து அதிக துரத்திற்கு செல்லவே விரும்புவதாக தெரிகின்றது. கிழக்கு மாகணத்தில் இந்த நிலைமை அதிகம். இதற்கு அங்குள்ள அரசியல் மற்றும் சமூக நிலைமைகளும் ஒரு காரணமாகும்.

கடந்த 14 வருடகால அரசியல் அனுபவங்களை தொகுத்து நோக்கினால், விடுதலைப் புலிகள் தொடர்பான அரசியல் கதைகள் பெரும்பாலும் யாழ் குடாநாட்டு விடயமாக சுருங்கிவிட்டது. வடக்கு மாகாணத்தின் குறிப்பாக, யாழ் குடாநாட்டை மற்றும் கிளிநொச்சியில் வாக்குகளை எதிர்பார்த்திருக்கும் அரசியல்வாதிகளே அவ்வப்போது விடுதலைப் புலிகளை உச்சரிப்பவர்களாக இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக தேர்தல் அரசியல் போட்டிக்கே இது அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. யாழ்ப்பாண அரசியல் உரையாடல்களை பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக தங்களை காண்பித்துக் கொள்வதில் ஒரு போட்டி இடம்பெறுகின்றது. இந்த போட்டியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கை ஓங்கிவிடக் கூடாதென்று ஏனைவர்களும், ஏனையவர்களின் கை ஓங்கிவிடக் கூடாதென்று கஜன் அணியினரும் செயற்படுகின்றனர். இதன் காரணமாகவே அவ்வபோது, நினைவேந்தல் சச்சரவுகள் இடம்பெறுகின்றன. ஆனால் இவ்வாறான அரசியலை தங்களின் வாக்குவங்கிக்கு தேவையில்லையென்று கருதும் அரசியல்வாதிகள் அமைதியாக இருக்கின்றனர். இவ்வாறான நினைவேந்தல் சண்டைகள், தீலிபன் சண்டை, பூபதி சண்டைகளுக்குள் அவர் ஈடுபடுவதில்லை.

ஆனால் கடந்த 14 வருடகால நீதிகோரும் அரசியலை உற்று நோக்கினால், இவர்களால் எதனையுமே சாதிக்க முடியவில்லை. இ;த்தனை கட்சிகள், இத்தனை புலம்பெயர் அமைப்புக்கள், இவர்களுக்குகிடையில் யார் சரியானவர்கள் என்னும் போட்டிகள், எவையும் தாயகத்தில் வாழும் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதிலோ, அரசியல் தீர்வை அடைவதிலோ குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தாக்கங்களை ஏற்படுத்தவில்லை. அண்மையில் இந்தக் கேள்வியை ஒரு புலம்பெயர் செயற்பாட்டாளர், கஜேந்திரகுமாரிடம் கேட்பதான ஒரு வீடியோ கிளிப் வெளியாகியிருந்தது. 13 வருடங்களாக எதை அடைய முடிந்தது என்று அந்த நபர் கேட்டபோது, அதற்கு கஜேந்திரகுமாரின் பதிலோ நீர் எந்ந அமைப்பு? உண்மையில் அவரின் கேள்விக்கு கஜேந்திரகுமாரிடம் பதிலில்லை. கடந்த 14 வருடகால அரசியல் நகர்வுகளை உற்றுநோக்கினால், கஜேந்திரகுமார் அணியினரின் பிரதான அரசியல் செயற்பாடாக இருந்தது, இருப்பது, ஒன்று மட்டுமே, அதாவது, மற்றவர்களை குற்றம்சாட்டுவது, மற்றவர்களுக்கு இந்திய அடிவருடிகள் முகவர்களென்று பட்டம் கூூட்டுவது.

2008, இறுதி மாவீரர் தின உரையிலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், இந்திய பேரரசுடன் உறவுகளை ஏற்படுத்த விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். 2006இல், விடுதலைப் புலிகளின் தத்துவ ஆசிரியராக அறியப்பட்ட அன்ரன் பாலசிங்கம், இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் தொடர்பில் முன்னை பத்திகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். அதாவது, விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் தாம் வருந்தி மன்னிப்பு கோருவதாக பாலசிங்கம் தெரிவித்திருந்தார். இதில் இந்திய படைகளுடன் சண்டையிட்டது, ராஜீவ்காந்தியின் கொலை தொடர்பிலும் பால சிங்கம் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவை தவிர்த்து, தாண்டி பயணித்து, எதனையும் செய்ய முடியாதென்பதை தனது இறுதிக் காலத்தில் பிரபாகரன் உணர்ந்திருந்தார். பாலசிங்கத்திற்கு அந்த உணர்வு ஏற்கனவே இருந்தது. அதன் காரணமாகத்தான் முன்னரே மன்னிப்பும் கோரியாவது, இநதியாவுடன் மீண்டும் உறவுகளை ஏற்படுத்துவதற்கும் அவர் முயற்சித்தார். இந்த பின்புலத்தில், இந்தியாவுடன் உறவுகளை ஏற்படுத்த வேண்டு;மென்றும், அதனுடன் பணியாற்ற வேண்டும், அவர்களது ஆலோசனையை செவிமடுக்க வேண்டுமென்று கூறுபவர்கள் இந்திய அடிவருடிகள், இந்திய முகவர்கள் என்றால், இந்த விடயத்தின் முன்னோடி பாலசிங்கமும் பிரபாகரனுமல்லவா! அவர்களையும் அடிவருடிகள், முகவர்களென்று அழைப்பதற்கு கஜேந்திரகுமாரும் அவரது தொண்டர்களும் தயாரா?

இதே போன்று கூட்டமைப்பின் செயற்பாடுகளை எடுத்து நோக்கினால், கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டுவதையே ஒரு பிரதான அரசியலாக முன்னெடுத்தது. சூழ்நிலைமைகளை புரிந்துகொண்டு, அரசியலை முன்னெடுப்பது தொடர்பில் சிந்திக்காமல், அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டுவதன் மூலம் தனது தவறுகளை மூடிமறைக்க முற்பட்டது. அரசாங்கம் – அதாவது, சிங்கள ஆட்சியாளர்கள் எதனையும் தாமாக செய்ய மாட்டார்கள், என்பதுதானே இத்தீவின் சிங்கள அரசியல் வரலாறு. அவ்வாறான சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து, அதிகாரத்தை பெறுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், அதற்கான ராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுப்பதும்தானே தமிழ் அரசியல் இலக்கு. அரசாங்கத்தை குற்றம்சாட்டுவதற்கு எதற்கு ஒரு தனியான கட்சி?

14 வருடகால தமிழர் லொபி, எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தோல்விலேயே முடிந்திருக்கின்றது. இதற்கான காரணங்களை ஆராய வேண்டும். இதற்கு நான் முன்னர் குறிப்பிட்ட ஒரு விடயத்தைப்பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். அதாவது, கடந்த காலம் தொடர்பான பரிவுணர்விற்கும் அரசியலில் கடக்க வேண்டிய உண்மைகளுக்கும் இடையில் சிக்குப்படுசதிலிருந்து விடுபட வேண்டும். தமிழர் அரசியல் லொபியை விடுதலைப் புலி விசுவாசத்திலிருந்து வெளியில் எடுக்க வேண்டும். சாகசக் கதைகள் தமிழர்களுக்குரியதே தவிர, அது சர்வதேசத்துக்குரியதல்ல.

விடுதலைப் புலிகள் தொடர்பான மேற்குலகின் பார்வையில் எவ்வித மாற்றமும் இல்லை. மாற்றமும் ஏற்படாது. யுத்தம் முடிவுற்று, 14 வருடங்களின் பின்னரும், கூட விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரை அப்படியே தொடர்கின்றது. மேற்குலகம் விடுதலைப் புலிகள்அமைப்பை எல்லைதாண்டிய பயங்கரவாத கண்ணோட்டத்திலேயே நோக்கிவருகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில், தமிழர்களுக்கான நீதி கோரும் லொபியை முன்னெடுக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் தங்களை புலி விசுவாச வட்டத்திற்குள் அடையாளப்படுத்துவதானது, அவர்களது நகர்வுகளில் ஒரு போதும் முன்னேற்றத்தை ஏற்படுத்தாது. கடந்த 14 வருடகால, நீதிக்கான தமிழ் லொபியின் தோல்வியை இந்தக் கண்ணோட்டத்தில் நோக்குவதற்கு நாம் தயாராக வேண்டும். மேற்குலகத்தினால் பயங்கரவாத அமைப்பாக நோக்கப்படும் ஒரு அமைப்பின் விசுவாசிகளாக, மேற்குலகத்தை அணுகுவது, நம்மீதான பரிவுணர்வை ஏற்படுத்தாது. உண்மையில் இந்த விடயம் தொடர்ந்தும் சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கே சாதகமாக இருக்கின்றது. இப்போதும் தாங்கள் பயங்கரவாத்தினால் பாதிக்கப்பட்ட நாடென்னும் ஒரு பிரச்சாரத்தோடுதான், சிங்கள ஆளும் வர்க்கம் உலகத்தை எதிர்கொள்ளுகின்றது. இதனை புரிந்துகொள்ளாமல் நாம் முன்னெடுக்கும் விடயங்கள் எங்களுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். வேண்டுமானால் விசுவாசத்தை மனதில் வைத்துக் கொள்வோம், ஆனால் நமது நாவில் தந்திரம் மட்டுமே இருக்க வேண்டும். தந்திர அரசியலுக்கு விசுவாசம் இல்லை.