நுவரெலியா கடை தொகுதியில் தீ
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா, கண்டி பிரதான வீதியில் உள்ள கட்டட தொகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வியாபார நிலையங்கள் மூன்று எரிந்துள்ளன என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இந்த தீ விபத்து, இன்று பிற்பகல் 2.25 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொது மக்களும் வர்த்தகர்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்துள்ளனர்.
மேலும், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் சிறிது நேரத்தில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இத்தீவிபத்தில், புத்தக வியாபார நிலையம், துவிச்சக்கர வண்டிகளை விற்பனை செய்யும் வியாபார நிலையம், ஒலிபெருக்கி சாதனங்களை விற்பனை செய்யும் வியாபார நிலையம் ஆகிய மூன்று வியாபார நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயினால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பில் இதுவரை மதிப்பீடு செய்யவில்லை என குறித்த வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தீ விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









