நெஞ்சே எழு 4 – வாழ்தலின் தெரிவுகள்
க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )
எல்லாச்சாலைகளும் ரோமுக்குச்சென்றடைவதில்லை என்பதே இன்றைய யதார்த்தம். அத்திபாரங்கள் பலமாக போடப்பட்டு வெற்றி நிச்சயம் என்று நூறுவீதம் ஆணித்தரமாக சொல்லப்பட்டவர்கள், சொல்லப்பட்டவைகள், எத்தனையோ அத்திபாரமும் பாரற்றுச்சாய்ந்து போன வரலாறுகளை நாம் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம்.
தோற்றுப்போன பல நபர்கள், அல்லது சமுதாயங்கள் பல பின்னர் எனக்கு அல்லது எங்களுக்கு குறிப்பிட்ட சில தருணங்களில் காலம் தந்த தெரிவுகளில் சரியானதை தெரிவு செய்ய தெரிந்திருக்கவில்லை, அல்லது தவறிவிட்டுவிட்டோம் என புலம்புவதை கேட்டிருக்கின்றோம் அல்லவா?
வாழ்தலின் பலம் எதுவென்று கேட்டால் சரியானதை சரியான தருணத்தில் தெரிவு செய்யும் தருணமே ஆகும் என்றால் அது மிகையாகாது. எதிலும் சரியானவற்றை தெரிவுசெய்பவர்களின் வாழ்வு செழிக்கின்றது, புகழ்பெறுகின்றது ஜொலிக்கின்றது. பிழையான தெரிவுகள் வாழ்வை கசக்கவைக்கின்றது, வெறுக்க வைக்கின்றது.
Multiple Choice Questions என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்றே. இன்றும்கூட சர்வதேச ரீதியில் பலதரப்பட்ட பரீட்சைகளுக்கும் இந்த எம்.சீ.க்யூ முறைமூலமான வினாத்தாள்கள் கொடுக்கப்படுகின்றன. அதில் சரியான விடை நான்கிலும் ஒன்றுதான். என்றாலும் உரிய கேள்விக்கு நான்கு விடைகளும் சரியான பதிலையே சுட்டிநிற்கின்றதுபோல ஒரு மாயை தோன்றும். எனினும் ஏனைய மூன்றிலும் ஒன்றே ஒன்று மிகச்சரியான விடையினை கொண்டதாக இருக்கும் அதனை கண்டுபிடித்தாலே எமது புள்ளிகள் உயரும்.
நாம் வாழும் சவால் மிகுந்த வாழ்விலும், வாழ்வின் பல்வேறு கட்டங்களிலும் நாம் இந்த எம்.சி.க்யூ போன்ற நான்கு சொய்ஸ்களில் சரியானதை தெரிவுசெய்யும் கட்டத்தில் தவித்திருப்போம். அந்த வாழ்வின் கட்டங்களில் மிகச்சரியானதை நாம் தெரிவு செய்திருந்தோமானால் எம் வாழ்வுப்பாதை வளமானதாக மாற்றப்பட்டு முன்னேறியவர்களாக மாறியிருப்போம். விருப்பத்துக்கும், தமது திறமைக்கும் இடையில் சிக்கி பரிதவிப்போர் அதிகம்பேரை நாம் பார்த்திருப்போம்.
எமது செயல்களின் விளைவுகளும் இதே எம்.சி.க்யூ போன்ற நான்கு விடைகளையே எமக்கு திருப்பியும் தந்துவிடுகின்றது. ஒருவர் எதிர்பார்த்து செய்த செயல் நினைத்தபடி கிடைத்தால் அது திருப்தி, அதே செயல் நினைத்ததைவிட அதிகம் பலன் தந்தால் அது பூரிப்பு, நினைத்ததைவிட சற்று குறைவானால் அதிருப்தி, நினைத்ததே நடக்காதுவிட்டால் தோல்வி. அதாவது எமது ஒவ்வொரு செயலுக்கும் காலம் கொடுக்கப்போகும் பதிலும் எம்.சி.க்யூபோல நான்காகவே பூரிப்பு, திருப்தி, அதிருப்தி, தோல்வி என்றே அமையப்போகின்றது.
முன்னைய காலங்களைப்போலல்லாது இன்று பல துறைகள் முன்னேற்றப்பாதையிலும், இலாபத்தை தரும் துறைகளாகவும் நாளாந்தம் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்று இந்த ‘மல்ரிபிள் சொய்ஸ்’ என்ற நிலை இன்றுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை மட்டும் அன்றி எம் எவ்வொருவரினதும் எதிர்காலத்தையும் வழிவகுக்கக்கூடியதாகவே உள்ளது. இதில் எமக்கேற்ற மிகச்சரியான தெரிவை நாம் ‘ரிக்’ செய்தால் எமது முன்னேற்றப்பாதையின் பாதை இலகுவாக திறந்துவிட்டதாக கருதமுடிம்.
இந்தக்கட்டங்களிலேயே ஒருவனுடைய வெற்றிகளும் தோல்விகளும் நிர்ணயிக்கப்படுவதாகவும் உள்ளது. மிகச்சரியானதை, மிகச்சரியான நேரத்தில், மிகச்சரியான முறையில் தொடங்கினால் அந்தத்தொடக்கத்திலேயே முக்கல்வாசி வெற்றி கிடைத்துவிட்டதாக பல அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சரியான தெரிவைப்போல் அதற்கு மிக நெருக்கமாக பல மாஜைகளும் தோன்றுவதன் குறியீடுகளாகவே நாம் இந்த எம்.சி.க்யூவை கருதவேண்டும்.
தெரிவுகளை செய்தபோதும் கூட, சில தெரிவுகள் ஏனைய தெரிவுகளைவிட அந்த நேரத்தில் சரியானதாகவே தோன்றினாலும், பின்னர் அது பெரும் ஆபத்தில் போன அபாயகரமான தெரிவுகளும் அண்மைய வரலாறுகளில் இல்லாமல் இல்லை. தூரநோக்கத்துடன் சிந்திக்கின்றோம் என்ற பெயரில் அந்த நேரத்தில் அப்போது மிகச்சரியாக இருந்த தெரிவு பிழை எனக்கருத்தி, பிழையான தெரிவை, ‘ரிக்’ செய்துவிட்டு அந்தப்பிழையான தெரிவால் அத்திவாரமே தகர்க்கப்பட்ட வரலாறுகளும் உண்டு. எனவே வாழ்க்கை எம் முன்னால் வைக்கும் எம்.சி.க்யூ தெரிவுகளையும், அதன்மூலம் எமக்கு கிடைக்கப்போகும் அதே எம்.சி.க்யூ விடைகளையும் நாம் மிக அவதானமாக கையாளவேண்டும்.
பரீட்சைகளில் பல கேள்விகள் இருக்கும் ஒன்று பிழையாகப்போனாலும் பரவாய் இல்லை, அனால் எம் வாழ்க்கையின் கால கட்டங்களில் முக்கியமான வேளைகளில் காலம் எமக்கு முன்னாள் வைக்கும் எம்.சி.க்யூ கேள்வி ஒன்றே எனவே நாம் அதைப்பற்றி எம்மையே ஆராய்ந்து சரியான தெரிவை ‘ரிக்’ செய்யவேண்டும். மிகச்சரியானதை ‘ரிக்’ செய்தவர்கள் இன்று நாம் அண்ணாந்து பார்க்கமுடியாத உயரத்தில் உள்ளனர், பிழையாக ரிக் செய்தவர்கள் வாழ்விழந்து போய் உள்ளர். ஒரு சிலர் அதிஸ்ரவசமாக, குறிப்பிட்ட ஒன்றைப்பற்றிய விபரம் அறியாமல் தமது வாழ்வின் கட்டம் ஒன்றில் சாரியான பாதையினை ‘ரிக்’ செய்து வெற்றியின் உச்சிக்கு போனவர்களும் உண்டு. அதேவேளை மிகவும் திறமையுடன், பல செயற்திட்டங்களுடன் முன்னேறி எதோ ஒரு கட்டத்தில் தவறான வாழ்வின் புதிருக்கு விடையினை ‘ரிக்’ செய்து அத்தனை முயற்சிகளையும் போட்டுடைத்தவர்களும் உண்டு.
எனவே இந்த எம்.சி.க்யூ சொல்லும் விடையும் என்னவென்றால், தயமயந்தியாய் இரு என்பதுவே. அதாவது தமந்தியின் சுயம்வரத்துக்கு அவள் நளனைத்தான் காதலிக்கின்றாள் என அறிந்து தேவ குமாரர்கள் மற்றும் அசுரர்கள் பலர் நளனைப்போலவே தாமும் உருக்கொண்டு சுயம்வரத்தில் கலந்துகொண்டபோதும், அதன் சூட்சுமத்தை அறிந்து தேவகுமாரர்களின் பாதம் தரையில் படாது என்ற நுண்மையான விடயத்தை அந்தநேரம் மிகச்சரியான தருணத்தில் அறிவைப்பயன்படுத்தி, உண்மையான நளனுக்கு மாலையிட்டாள் தயமந்தி. அதேபோல எம் வாழ்வு எமக்கு முன்னாள் வைக்கும் பலதரப்பட்ட விடைகளில், மிகச்சரியனதை எமது நுண்அறிவு, அறிவாற்றல் மூலம் தெரிவுசெய்து வாழ்வில் வெற்றிபெறவேண்டும்.
முன்னைய பதிவுகள்
நெஞ்சே எழு 3 – பிக் பொஸ் சமூகம்
நெஞ்சே எழு 2 – தலைவர் எடுத்த முடிவுகள்
நெஞ்சே எழு 1 – மகிழ்தலில் மகிழ்தல்