செய்திகள்

நேபாளத்தின் புதிய அதிபராக ராம் சந்திர பௌடேல் தெரிவு!

நேபாளத்தின் புதிய அதிபராக எதிர்க்கட்சி வேட்பாளர் ராம் சந்திர பௌடேல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ராம் சந்திர பௌடேல் எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராவார்.

இது பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியான CPN-UML கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, அந்தக் கட்சி வேட்பாளருக்கு எதிராக பௌடேலுக்கு ஆதரவு அளித்த பிரதமா் புஷ்ப கமல் பிரசண்டாவுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாகக் கருதப்படுகிறது.

நேபாளத்தின் தற்போதைய அதிபா் வித்யா தேவி பண்டாரியின் பதவிக்காலம் இம்மாதம் 12 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

அவருக்கு பதிலாக அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நேற்று (09)  நடைபெற்றது. இதில், பாராளுமன்றத்தில் பெரிய கட்சியாக விளங்கும் நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக, சாதாரண பின்புலத்தைக் கொண்ட ராம் சந்திர பௌடேல் போட்டியிட்டாா். அவரை எதிா்த்து முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஒலியின் தலைமையிலான CPN-UML கட்சி சாா்பில் சுபாஷ் சந்திர நெம்பாங்  போட்டியிட்டாா்.

இதில், 64.13% வாக்குகளுடன் ராம் சந்திர பௌடேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, நாட்டின் 3-ஆவது அதிபராக அவா் எதிர்வரும் 12 ஆம் திகதி பொறுப்பேற்கவுள்ளார்.

அவர் சபாநாயகராக கடமையாற்றியுள்ளதுடன், ஐந்து தடவைகள் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

-(3)