நேர்மையான தேர்தலை நடத்த ஒத்துழைக்குமாறு மட்டு. அரச அதிபர் கோரிக்கை
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவுபெற்ற நிலையில் நடைபெறப்போகும் தேர்தலை நேர்மையானமுறையிலும் நியாயமான முறையிலும் நடத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியுமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் நடவடிக்கைகளில் பங்குகொண்டுள்ள கட்சிகளை அறிவுறுத்தும் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியுமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது தேர்தலின்போது மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் தொடர்பில் இங்கு அரசாங்க அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டது.





