படையினரை நாம் வேட்டையாடுவதாக கூறுபவர்கள்தான் தளபதியை சிறையில் அடைத்தனர்: மைத்திரி
யுத்தத்தின் பின்னான நல்லிணக்கத்தை பௌதீக வளங்களைக் கொண்டு கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல பாராளுமன்ற விளையாட்டரங்கில் நடைபெற்ற படைவீரர் நினைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாய் நாட்டுக்கு சமாதானத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக உயிர்களை தியாகம் செய்த, உடல் அவையவையங்களை தியாகம் செய்த படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கவலையையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த நிறைவின் பின்னர் நாடு என்ற ரீதியில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தவும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் சீமெந்து, கல், கம்பி போன்ற பௌதீக வளங்கள் பயன்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் இதயங்களை ஒன்றிணைத்தல், கோபம் ஆத்திரம், குரோத்தினால் பாதிக்கப்பட்ட இதயங்களை இணைப்பது சுலபமான காரியமல்ல என அவர் தெரிவித்துள்ளார். ஒரு சில தரப்பினர் அரசாங்கம் படையினரை வேட்டையாடி வருவதாக சில மாதங்களுக்கு முன்னதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
படைவீரர்களை வேட்டையாடுவதாக சுவரொட்டி ஒட்டுமாறு தூண்டிவிட்ட முக்கியஸ்தர்கள் யுத்த வெற்றிக்கு காரணமான பிரதான படைத் தளபதியை சிறையில் அடைத்தவர்கள்தான் என அவர் தெரிவித்துள்ளார். படைத் தளபதியை சிறையில் அடைத்து சிறைச்சாலை ஆடைகளை வழங்கி பல்வேறு வழிகளில் நெருக்கடி கொடுத்ததனை இந்த நாட்டு மக்கள் மறந்திருக்க வாய்ப்பு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
R-06




