பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனைசெய்த குற்றச்சாட்டில் இருவர் கைது
அட்டன் நகரிலுள்ள பிரபல பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் அந்த பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள மருந்தகமொன்றிலுள்ள இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து 30 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள போதையை ஏற்படுத்தும் இந்த மருந்து வில்லைகள் தலா 70 ரூபா வீதம் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த இருவரையும் கைது செய்தபோது அவர்களிடம் இருந்து போதையை ஏற்படுத்தும் 73 வில்லைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் இருவர் வழங்கிய தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ள இவர்களை நாளை புதன்கிழமை அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.







