செய்திகள்

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை: கொழும்பில் விஷேட சோதனை

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தொடர்ந்தும் நடைபெற்று வரும் கொலை சம்பந்தமாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன், மேல் மாகாணத்தில் சகல பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகத்திடமான நபர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அண்மைக் காலமாக பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

பாதாள உலக குழுக்களை அடக்குவது மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் கடந்த சில தினங்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் கொலைகள் நடந்தன. பாதாள உலக குழுவினருக்கு இடையிலான மோதலே இந்த கொலைகளுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
R-06