செய்திகள்

பாலஸ்தீன கமாஸ் அமைப்பும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் 

— 2014 இல் மன்னார் திருக்கேதீஸ்வரத்திலும், 2018 இல் மன்னாரிலும் கண்பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பற்றிய ஆய்வுச் செயற்பாடுகளைச் சர்வதேச ரீதியில் மேற்கொள்ள வேண்டுமென அப்போது பிரசாரப்படுத்தியிருந்தால், அதன் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மனிதப் புதை குழிகள் பற்றிய விடயத்திலும் சர்வதேசத்தின்  கவனத்தை ஈர்த்திருக்க முடியும்–

அ.நிக்ஸன்-

ரசிய – உக்ரெயன் போர் நீடித்து வரும் நிலையில் அங்கு அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்பது பற்றிய கவலைகள் வெளியிடப்படுகின்றன. ஆகவே உலகின் கவனம் திசை திரும்பியுள்ள சூழலில், சர்வதேசக் கவனம் இருக்காது என்ற துணிவுடன், இலங்கை, மியன்மார் மற்றும் இஸரேல் போன்ற அரசுகள்  தத்தமது நாடுகளுக்குள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஒன ஒடுக்கல் செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

போரின் ஆரம்பத்தில் இருந்தே அணு ஆயுதங்கள் ரசியாவிற்கு ‘மேசையில்’ இருந்ததாகவும், அமெரிக்காவும்  அதன் கூட்டாளி நாடுகளும் நேரடியாகப் போரில் ஈடுபடுத்துவதைத் தடுக்கும் வழிமுறையாகவே அணு ஆயுதங்களைத் தனது மேசையில் ரசியா வைத்திருந்தது என்றும்  அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் செர்ஜி காரகனோ கூறியதாக மொடோன்டிப்ளோமேசி (moderndiplomacy) என்ற ஆங்கில இணையத்தில் சென்ற செவ்வாய்க்கிழமை வெளியான கட்டுரை ஒன்றில் விபரிக்கப்பட்டுள்ளது.

ரசியா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்றும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோர் போரின் வெற்றியாளர்கள் அல்ல என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

இப் பின்னணியில், ஜனாதிபதி விளாடிமிர் புடின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தத்துவார்த்த சாத்தியம் உள்ளது. ஆனால் இப்போது அவற்றைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று அவர் அந்தக் கேள்விக்கு விளக்கமளித்துள்ளார்.

ஆகவே ரசிய – உக்ரெயன் போர், உலகின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு வழி வகுத்துள்ள பின்னணியில், அணு ஆயுதப் பயன்பாடுகள், அதனைத் தடுக்கும் கோட்பாட்டு விளங்கங்கள் மற்றும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் வியூகங்கள் என்று பல பரிமாணங்களில் உரையாடல்கள் நடைபெறுகின்றன. சர்வதேச ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

இவ்வாறு உலகின் கவனம் திசை திரும்பியுள்ள சூழலில் பாலஸ்தீனம், குர்திஸ்தான் மற்றும் இலங்கைத்தீவின் ஈழத்தமிழர் போன்று இன விடுதலை கோரும் சமூகங்களின் விவகாரங்கள் சர்வதேச அரங்கில் பத்தோடு பதினொன்றாக மாறி வருகின்றன.

இன ஒடுக்கல் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் தற்போது மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு அரசியல் – இராணுவ பலத்தைக் கொடுத்துள்ளது எனலாம்.

இதனைப் பக்கபலமாகக் கருதியே இஸ்ரேல் சில மாதங்களாக பாலஸ்தீனயர்களின் மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இராணுவக் கண்காணிப்புகள் மற்றும் குடியேற்றங்களை அதிகரித்து வருகின்றது.

1948 இல் இருந்து நீடித்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீனம் மோதலை மேலும் அதிகரிக்க மற்றொரு சம்பவம் சென்ற மூன்றாம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

மேற்குக் கரை ப் பகுதியில் ஜெனின் நகரில் உள்ள பாலத்தீன அகதிகள் முகாமில் பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அதிரடிச் சோதனையை இஸ்ரேல் இராணுவம் திங்கட்கிழமை நடத்தி உள்ளது.

இச் சோதனையின்போது இஸ்ரேல் இராணுவத்துக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பத்து பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். நூறு பேர் காயமடைந்தனர் என்று கமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது.

ஆனால்,  இஸ்ரேல் அரசு மீது காரசாரமான கண்டனத்தை மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் வெளியிடவில்லை. மாறாக பாலஸ்தீன கமாஸ் போட்டக் குழு மீது கண்டனங்கள் எழுந்துள்ளன.  சிறிய கண்டன அறிக்கையுடன் ஐக்கிய நாடுகள் சபை அமைதியாகிவிட்டது.

ஏனெனில்,  ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் இஸ்ரேல் உள்ளிட்ட பலம் மிக்க நாடுகள் மற்றும் இலங்கை போன்ற சிறிய நாடுகளின் முழு ஒத்துழைப்பு மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குத் தேவைப்படுகின்றன.

இதன் காரணமாகவே இஸ்ரேல் என்ற பலம் மிக்க அரசின், பாலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளை வல்லரசு நாடுகள் தெரிந்தும் தெரியாதது போன்றும் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ரசியாவின் அணு ஆயுதப் பயன்பாடுகள் உறுதியாக இருக்குமானால் ஐக்கிய நாடுகள் சபையில் அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்படும்.

அத்துடன் நேட்டோ இராணுவ அணி முழுமையாக உக்ரெயன் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. இப் பின்புலத்தில் ஒருங்கிணைந்த எதிரியை எதிர்கொள்ள ரசியா எடுக்கப் போகும் மாற்று ஏற்பாடு என்பது, அணு ஆயுதமாக இருக்குமானால் அதன் விளைவுகள் பாரியதாக அமையும்.

குறிப்பாக இலங்கை, மியன்மார் உள்ளிட்ட சிறிய நாடுகள் உட்பட இஸ்ரேல் போன்ற பலமுள்ள அனைத்து நாடுகளையும் ஒரு அணியில் சேர்க்க அமெரிக்கா முற்படும். இதில் இந்தியா எந்தப் பக்கமும் ஆதரவு வழங்கக்கூடிய வாய்ப்புகள் இல்லை.

இருந்தாலும் ரசிய உறவை இந்தியா தொடர்ந்து பேணும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. இச் சூழலில், இன விடுதலை கோரி நிற்கும் இனங்களை அடக்கி வரும் இலங்கை போன்ற சிறிய அரசுகளுக்குத் தமது இன ஒடுக்கல் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்த இலகுவான சந்தர்ப்பங்கள் கிட்டியுள்ளன என்று கூறலாம்.

மியன்மர், இலங்கை போன்ற நாடுகள் தமது இன ஒடுக்கல் செயற்பாடுகளை ரசிய உக்ரெயன் போர்க் காலப் பகுதியில் தீவிரப்படுத்தி வருவதைக் கடந்த ஒரு வருடமாக அவதானிக்க முடியும்.

இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் கடந்த ஒரு வருடத்தில் விகாரைகள், புத்தர் சிலைகள் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் அதிகரித்துள்ளன. முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் பெருமளவு காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முந்திரிக்குளம், எரிஞ்சகாடு, கொக்குமோட்டை, அக்கரைவெளி, ஆமையன்குளம் போன்ற பகுதிகளில் மூன்று கிராமத்து மக்களுக்குச் சொந்தமான ஆயிரத்து இருநூறு ஏக்கர் காணிகள் உள்ளன.  இவற்றில்; எரிஞ்ச காட்டுப் பகுதியில் மாத்திரம் முந்நூறு ஏக்கர் காணிகள் மக்களிடம் மீளவும் கையளிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் மன்னார், முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களில் காணிகளின் விபரங்கள் கோரப்பட்டுள்ளன. இக் காணிகளை இணைத்து விஸ்தரிக்க முற்படுவதால், காணிகள் பறிபோவதுடன் தமிழ் இன விகிதாசாரத்திலும் மாற்றம் ஏற்படும் ஆபத்துகளும் பகிரங்கமாகத் தெரிகின்றன.

மகாவலி அபிவிருத்திக்காக ‘ஜே’ வலயம் ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக முபத்து ஏழு கிராமங்களைத் தமிழர்கள் இழக்கும் ஆபத்து ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளாh்.

அதேவேளை முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்ப் பிரதேசத்தில் கடந்த வாரம் போர்க்கால மனித எலும்புக்கூடுகள், எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதற்குரிய அகழ்வுப் பணி சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப இடம்பெறவில்லையென தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆனால், மன்னார் மாந்தைச் சந்தியில் இருந்து எழுபத்து ஐந்து மீற்றர் தொலைவில் திருக்கேதீச்சரம் கோவிலுக்குச் செல்லும் வழியில் 2014 பெப்வரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி பற்றிய விவகாரம் ஏற்கனவே மூடி மறைக்கபட்டுள்ளது.

எண்பது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 2014 ஜனவரி மாதம் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகள் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம், சட்ட வைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரட்ண,  பொலிஸார் ஆகியோரின்  முன்னிலையில் அப்போது நடைபெற்றன.

மொத்தமாக ஐம்பத்து ஐந்து எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டு இவை மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது அந்த எலும்புக் கூடுகளுக்கு என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியாது.

2014 ஒக்ரோபர் மாதம் இரண்டாம் ஆம் திகதி மன்னர் நீதவான் ஆனந்தி கனகரத்தினத்தின் முன்னிலையில் மீண்டும் இருபதாவது தடவையாக புதைகுழி தோண்டப்பட்டபோது மேலும் மூன்று எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தமாக ஐம்பத்து எட்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனாலும் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

அதேநேரம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மன்னார் நகரில் உள்ள ச.தொ.ச அரச வியாபாரக் கட்டடத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியில சுமார் முந்நூற்று இருபத்து ஐந்து மனித எலும்புக் கூடுகள் மனி எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

அவை மேலதிக ஆய்வுக்காக அமெரிக்காவின் புளோறிடா மாநிலத்துக்கு அனுப்பி அறிக்கை பெறப்பட்டபோதும், இதுவரை நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட எலும்புக் கூடுகள் மாற்றப்பட்டு மன்னர் கால எலும்புகளே அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதாக மனித உரிமைகள் சட்டத்தரணிகள் சிலர் அப்போது சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இப் பின்னணியில் இது குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் பதின் மூன்றாம் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

2018 இல் மைத்திரி – ரணில் அரசாங்கம் பதவியில் இருந்தால் தமிழரசுக் கட்சி, மன்னார் ச.தொ.ச கட்டடத்திற்குக் கீழ் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பற்றி அப்போது வாய்திறக்கவில்லை. 2014 இல் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் பற்றியும் அப்போது எதுவுமே பேசவில்லை.

ஆனால், தற்போது முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதை குழு சர்வதேச தரத்துக்கு ஏற்ப அகழ்வு செய்யப்படவில்லை எனக் குற்றம் சுமத்துவதில் என்ன நியாயம் உண்டு?

முல்லைத்தீவில் இலங்கைப் படையினர் நிலை கொண்டுள்ள காணிகள் மற்றும் இராணுவ முகாம்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளின் கீழ் மனித புதைகுழிகள் காணப்படலாம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஆகவே 1950 களில் கல்லோயா குடியேற்றத் திட்டங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பௌத்த மயமாக்கல் ஊடான தமிழ் இன அழிப்புச் செயற்பாடுகளின் தொடர்ச்சி, 2009 இற்குப் பின்னரான சூழலில், அதாவது கடந்த பதின் நான்கு ஆண்டுகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன என்பதற்குரிய சான்றுகள் இருக்கின்றன.

ஆனால் தப்போது ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் அதுவும் சர்வதேசம் குழப்பமடைந்துள்ள நிலையில் முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள், தமிழ் இன அழிப்புக்கான ஆதராங்கள் என்று சர்வதேசத்தில் நிறுவக்கூடிய ஏது நிலைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

2014 இல் மன்னார் திருக்கேதீஸ்வரத்திலும், 2018 இல் மன்னாரிலும் கண்பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பற்றிய ஆய்வுச் செயற்பாடுகளைச் சர்வதேச ரீதியில் மேற்கொள்ள வேண்டுமென அப்போது பிரசாரப்படுத்தியிருந்தால், அதன் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மனிதப் புதை குழிகள் பற்றிய விடயத்திலும் சர்வதேசத்தின்  கவனத்தை ஈர்த்திருக்க முடியும்.

ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலின் பின்னரான சர்வதேச ஒழுங்கு என்பது எந்த நலன் அடிப்படையில் மாற்றமடையும் என்று தற்போதைக்குச் சரியாகக் கணிக்க முடியாது.

ஆனாலும் ,  சர்வதேசக் கவனத்தை ஈர்ப்பதற்குரிய உத்திகளைத் தமிழ்த்தரப்பு தற்போதிருந்தே, ஒரு பொறிமுறையின் கீழ் திட்டமிட்டு வகுக்க முடியும். அதற்கான சூழல் இல்லாமல் இல்லை.

ஏனெனில் இந்தோ – பசுபிக் விவகாரம் என்பது குறிப்பாக பிராந்தியத்தில் சீன ஆதிக்கம் என்பது ரசிய – உக்ரெயன் போரின் பின்னரான சூழலில் வேறொரு வியூகத்தில் மாறக்கூடிய நகர்வுகள் தென்படுகின்றன. இதற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கக்கூடிய  சாத்தியங்களும் அதிகமாக உள்ளன.

திங்கட்கிழமை பாலஸ்தீன அகதி முகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் காமஸ் அமைப்பு மாற்றுச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடியும்.

குறிப்பாக ரசிய-  உக்ரெயன் போரின் பின்னர் சர்வதேசக் கவனம் மாறும் சூழலில், இஸ்ரேல் மீது அரசியல் ரீதியாகக் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடிய பொறிமுறைகளை கமாஸ் அமைப்பு இப்போதிருந்தே தயாரித்து வருவதாக இஸ்ரேல் – பாலஸ்தீன ஆய்வாளர்கள் கூறியிருப்பதாக ரெட்பிஷ் என்ற ரசிய டிஜிட்ரல் ஊடகம் வெளியிட்டுள்ள தகவலைத் தமிழ்த் தரப்பும்  கவனத்தில் எடுக்க வேண்டிய தருணம் இது.

அதுவும் தற்போதைய கமாஸ் ஆட்சியாளர்கள் மீது பாலஸ்தீனிய இளைஞர்கள் நம்பிக்கை இழந்து போராடி வரும் சூழலில் மாற்று ஏற்பாடுகளைக் கமாஸ் இயக்கம் கையாள ஆரம்பித்திருக்கிறது.

கமாஸ் அமைப்பு மீது நம்பிக்கை இழந்த இளைஞர்கள் குழு ஒன்று இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பிபிசி உலக சேவையின் செய்தியாளர் யூசப் எல்டின் சென்ற யூன் மாதம் பதின் ஏழாம் திகதி எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாலஸ்தீனிய இளைஞர்களின் போராட்டம் வன்முறை அல்ல. மாறாக கமாஸ் அமைப்பின் செயற்பாடுகளைக் கடந்து ஜனநாயக வழியில் புதிய வியூகங்களை வகுத்துச்  சர்வதேசக் கவனத்தை ஈர்ப்பதற்கான போராட்டம் என்று பிபிசி செய்தியாளர் தனது கட்டுரையில் விபரிக்கிறார்.