பாவனா கடத்தல் விவகாரம்: ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன
பிரபல நடிகை பாவனா, காரில் கடத்தப்பட்டு துன்புறுத்தலுக்கு ஆளானபோது எடுக்கப்பட்ட விடியோ காட்சிகளை, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் பணம் பறிக்கும் நோக்கம் இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நடிகை பாவனா தனது காரில் படப்பிடிப்பு முடித்துவிட்டு கொச்சியிலிருந்து திருச்சூருக்கு அண்மையில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு வேனில் வந்த மர்ம நபர்கள் அவரை காருடன் கடத்திச் சென்றனர்.
அப்போது பாவனாவை பாலியல்ரீதியாகத் துன்புறுத்தி, அந்தக் காட்சியை புகைப்படமாகவும், விடியோவாகவும் அவர்கள் பதிவு செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின், பிரதீப், சலீம் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளான பல்சர் சுனி மற்றும் வி.பி. விஜேஷ் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாவனாவை துன்புறுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் விடியோ ஆதாரங்களை குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றியதாக கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர். பாவனாவை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் இந்தக் கடத்தல் சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றியது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் கூறினர். நன்றி : தினமணி




