புத்தாண்டை கொண்டாட தயார் நிலையில் மலையக மக்கள் (படங்கள்)
பிறக்கின்ற புத்தாண்டு ‘மன்மத’ என்ற பெயரில் பிறக்கின்றது. ‘மன்மதன்’ என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படும். காரணம், மன்மதனின் அருள் இருந்தால் தான் சகல ஜீவ ராசிகளுக்கும் இனப்பெருக்கம் ஏற்படும்.
பிறக்கும் புத்தாண்டு கடக லக்னத்தில் பிறக்கின்றது. லக்னாதிபதி சந்திரனை லக்னத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் குரு பகவான் பார்க்கிறார். எனவே, குரு சந்திர யோகத்தோடும், குரு பார்க்கும் ராசியாகவும், குரு ஓரையிலும் புத்தாண்டு பிறப்பதாலும் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதற்கேற்ப சகல யோகங்களும் மக்களுக்கு வந்து சேரப் போகின்றது.
குருசந்திர யோகம், புத-ஆதித்ய யோகம் ஆகியவையோடு பஞ்ச பட்சியில் மயில் நடைபயிலும் நேரத்தில் வருடம் பிறப்பதால் நாட்டு மக்கள் நலம் பெறவும் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரவும், கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கவும், கொள்கைப் பிடிப்போடு செயல்படவும் வழிவகுக்கப் போகின்றது.
இந்த புத்தாண்டு நாளை மறுதினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டை முன்னிட்டு இன்று அட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது. அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















