புலம்பெயர்ந்த மக்களுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை: பாராளுமன்றில் பிரதமர் ரணில் உறுதி
இந்தியாவில் உள்ள அகதிகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனைவருக்கும் பிரஜாவுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சபையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாய கமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
டக்ளஸ் தேவாநந்தா அந்தக் கேள்வியில், 1983 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் கலவரங்கள், யுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் இலங்கையிலிருந்து பலர் வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். விசேடமாக இந்தியாவிற்கு 3 இலட்சத்து 4 ஆயிரத்து 289 பேர் இடம்பெயர்ந்து சென்றுள்ளதுடன் அதில் 2 இலட்சத்து 4 ஆயிரத்து 269 பேர் மீண்டும் நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது சுமார் 66 பேர் முகாம்களில் தங்கியிருப்பதோடு 34,000 பேர் வரையிலானவர்கள் முகாம்களுக்கு வெளியில் தங்கியிருக்கின்றார்கள். அவர்கள் படிப்படியாக நாட்டுக்குள் திரும்பிக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. எனினும் அவர்களின் மீள் குடியேற்றம், ஆட்பதிவுகள் போன்ற விடயங்களில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
அதே நேரம் தமிழ்நாட்டில் அகதிகளாகவுள்ள மக்களின் குடும்பத் தலைவர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாவும் ஏனைய உறுப்பினருக்கு 750 ரூபாவும் இரண்டு வயதுக்கும் குறைந்த குழந்கைளுக்கு 400 ரூபா வீதமும் வழங்கப்படுகின்றது. இந்த கொடுப்பனவு அந்த மக்களுக்கு போதாமையினால் கூலி வேலைக்குச் செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது. ஆகவே குறித்த மக்களை பதிவு செய்வதற்காக விசேட ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென கோரியதோடு அது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என வினவினார்.
பிரதமர் மேலும் தெரிவிக்கையில்;
1983 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையிலிருந்து அகதிகளாக இடம்பெயர்ந்து இந்தியா உட்பட வெளிநாடுகளுக்குச் சென்றவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்து குடியேற்றுவதே அரசாங்கத்தின் கொள்கையாகவுள்ளது. அவர்களுக்கான பிரஜாவுரிமையை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இடம்பெயர்ந்தவர்களில் சிலர் வேறு நாடுகளில் பிரஜாவுரிமையை பெற்றுள்ளனர். இவர்கள் இலங்கை பிரஜாவுரிமையைக் கோருகின்றனர். அவ்வாறானவர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமையைக் கோரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்தியாவில் உள்ள அகதிகளும் இதற்குள் உள்வாங்கப்படுவார்கள். இந்தியாவிலுள்ள அகதிகள் பற்றி நான் தகவல்களைக் கோரியிருந்தேன். அது தொடர்பாக சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதுவரை காலமும் 22 வயதுக்கும் மேற்பட்டவர்களை பதிவு செய்வதற்கு முறைமை இருந்தது. தற்போது 22 வயதுக்கு குறைந்தவர்களையும் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் நாடு திரும்புவதற்கு தயாராகவுள்ள அகதிகளுக்கு குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்நாட்டு மற்றும் அலுவல்கள் அமைச்சருக்கு பணிப்புரை விடுக்கின்றேன் என்றார்.
R-06




