புலம்பெயர் நாடுகளில் நடைபெறவிருக்கும் 7 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வு விபரங்கள்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் நாளை புதன்கிழமை புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.
அவற்றின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
பிரித்தானியா
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனின் வாசஸ்தலத்துக்கு முன்பாக மாலை 5மணிக்கு நினைவுகூரல் நிகழ்வு இடம்பெறும் .
இதேவேளை, பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மாலை 3 மணிக்கு மத்திய லண்டனின் Waterloo Place பகுதியில் இருந்து Richmond terrace என்ற இடத்தை நோக்கி பேரணி ஒன்று நடைபெற ஏற்பாடாகி இருக்கிறது.
சுவிட்சர்லாந்து
ஸ்ரீலங்கா பயங்கரவாத அரசின் கட்டமைப்பு சார் தமிழினப் படுகொலையை சுவிஸ் சமூகத்திற்கு வெளிக்கொண்டு வரவும், முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு நீதி வேண்டியும் முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வு சுவிஸில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு நாளை புதன்கிழமை சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு முன்னால் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.இந்த நிகழ்வை சுவிஸ் ஈழத்தமிழரவை, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு, சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பு, அக்கினிப் பறவைகள் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொள்வோருக்கென வாகன ஒழுங்குகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நெதர்லாந்து
நெதர்லாந்து தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நெதர்லாந்து நேரப்படி நாளை புதன்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு Damplein, Amsterdam என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் மக்களை நினைவு கூர்ந்து தாயகத்தில் கடந்த 12ம் திகதி தொடக்கம் வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
டென்மார்க்
ஈழத்தமிழ் மக்கள் மீது சிங்கள இனவாத அரசு நடத்திய இனப்படுகொலையை உலகிற்கு எடுத்துக்கூறிய முள்ளிவாய்க்கால் படுகொலையின் 7ம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்கில் நினைவு கூரப்படவுள்ளது. நாளை புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு டென்மார்க் நாடாளுமன்றத்திற்கு முன்னால் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வை டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக அரங்கேறிக் கொண்டிருக்கும் அவலங்களை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறவும் அநியாயமாக கொல்லப்பட்டோருக்கு நியாயம் கிடைக்க வலியுறுத்தியும் டென்மார்க் வாழ் தமிழர்களை இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம்
ஈழத்தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பெல்ஜியத்தில் இடம்பெறவுள்ளது. வணக்க நிகழ்வு நாளை புதன்கிழமை மாலை அந்த நாட்டு நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு நினைவுக் கல்லறை முன்பாக ஆரம்பமாகி புதிய நீதிமன்ற முன்றலில் நிறைவடையவுள்ளது. தாயக விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்போம் அயராது செயற்படுவோம் என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், பெல்ஜியம் வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ்
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 7ம் ஆண்டு நினைவு நாள் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் இடம்பெறவுள்ளது. இந்த அஞ்சலி நிகழ்வு ஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளை புதன்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலில் (Orangerie parc அருகில்) ஆரம்பமாகவுள்ளது. ஸ்ரீலங்கா அரசினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தி, நீதியைப் பெற்றுத் தரவும், அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கவும், தமிழ் மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைகளை ஏற்றுக்கொள்ளக் கோரியும் நடைபெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வில், வரலாற்றுக் கடமையை உணர்ந்து அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா
சிங்களப் படைகளால் காட்டுமிராண்டித்தனமாக கொன்றொழிக்கப்பட்ட அப்பாவி ஈழத்தமிழ் மக்களை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் இடம்பெறவுள்ளது.’ தமிழர் இனவழிப்பு நினைவு நாள்’ நிகழ்வு, எதிர்வரும் 18ம் திகதி புதன்கிழமை மாலை 6.30 அளவில் Hungarian Community Centre, 760 Boronia Rd, Wantirna VIC 3152 என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.
கனடா
கனடா ஸ்காபரோ அல்மேர்ட் காம்பல் சதுக்கத்தில் 7ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள் அனுஸ்டிக்கப்படவுள்ளது. மே 18 புதன்கிழமை மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந் நிகழ்வினை கனடிய தமிழர் தேசிய அவை ஏற்பாடு செய்துள்ளது. இந் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு உச்சத்தின் போது இறுதிவரை அந்த மக்களோடு இருந்த, தமிழின அழிப்பின் நேரடி சாட்சியான டொக்டர் வரதராஜன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மே 18 நிகழ்வுகள் உலகின் பல பாகங்களிலும் அந்நாடுகளுக்குரிய நேர ஒழுங்கமைப்பின் அடிப்படையில் அனுஸ்டிக்கப்படவுள்ளன.




