பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பாக யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரிச் சமூகத்தால் அரச அதிபருக்கு மகஜர் கையளிப்பு
பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வின் ஓர் அங்கமாக யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரிச் சமூகத்தால் யாழ்.மாவட்ட அரச அதிபருக்கான மகஜர் இன்று வெள்ளிக்கிழமை(29.5.2015) கையளிக்கப்பட்டது.
வயாவிளான் மத்திய கல்லூரிச் சமூகம் ஒன்றிணைந்து “வருமுன் காப்போம்” எனும் தொனிப்பொருளில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளுக்கெதிரான நடைபவனியை இன்று நடாத்தியிருந்தது.நடைபவனியைத் தொடர்ந்து கல்லூரி மண்டபத்தில் அதிபர் வி.ரி.ஜெயந்தன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றது.நிகழ்வில் முக்கிய அம்சமாக கல்லூரி ஆசிரியர் இ.தனஞ்சயனின் தயாரிப்பில் உருவான ‘வருமுன் காப்போம்’ குறும்படக் குறுந்தகடும் வெளியிட்டு வைக்கப்பட்டது.குறும்படக் காட்சி திரையில் காண்பிக்கப்பட்டது.குறித்த குறும்படம் 7 நிமிடங்களைக் கொண்டதாக தற்போதைய யதார்த்தமான சூழ்நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் கதையமைப்புடனும்,காட்சிப்படுத்தலுடனுடனும் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்தக் குறும்படத்தில் பெண்களுக்கெதிரான வன்முறையைத் தூண்டும் காரணிகள்,கல்லூரி மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தரும் போது அபாயகரமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்,வன்முறையைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நமடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.கல்லூரி மாணவ மாணவியர்களின் நடிப்பில் உருவான இக் குறும்படம் மாணவர்கள் மத்தியிலும்,சமூகத்தின் மத்தியிலும் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன்,தத்ரூபமாகவும் படமாக்கப்பட்டுள்ளது.
இதன் போது வயாவிளான் மத்திய கல்லூரி அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்,கல்விசாரா ஊழியர்களின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான விழிப்புணர்வு மகஜரொன்றும்,குறுந்தகடும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்குமாறு கூறி அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தி இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம விருந்தினரிடம் வழங்கப்பட்டது.குறித்த மகஜரைப் பெற்றுக் கொண்ட பிரதம விருந்தினர் குறிதத மகஜரை அரசாங்க அதிபரிடம் சேர்ப்பித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க ஆவண செய்வதாகத் தெரிவித்தார். இந் நிகழ்வில் யாழ்.மாவட்டப் பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி.உதயணி நவரட்ணம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு அண்மைக்காலமாகப் பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளும் அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய வழிமுறைகளும் தொடர்பில் சிறப்புரையாற்றினார்.அத்துடன் தெல்லிப்பழைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஈஸ்வரதாஸ்,காங்கேசன் துறைப் பிரிவுப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜே.எம்.ஜபார்,தெல்லிப்பழைச் சுகாதார வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் ஆகியோரும் உரையாற்றினர்.ஆசிரியர்கள் சார்பாக வண இ.ராஜ்குமார் உரையாற்றிpயதுடன் மாணவிகளின் பெண்கள் வன்முறைகளுக்கெதிரான பாடல்,உயர்தர மாணவி ஸ்ரீலக்சனாவின் பேச்சு போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.
குறித்த நிகழ்வில் கல்லூரியின் மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

















