செய்திகள்

பெப்ரவரி 21ம் திகதி கட்சியின் பெயரை அறிவிக்கிறார் கமல்

பெப்ரவரி 21ம் திகதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், ராமநாதபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கிறார்.முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார்.இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
ஜனநயகத்தின் நாயகர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். உங்கள் ஆதரவோடு இந்த பயணத்தை ஆரம்பிக்கிறேன். தலைவன் வழிநடத்தவே இருக்க வேண்டும். என்னை வளர்த்தெடுத்த சமூகத்திற்கு நன்றியை தாண்டி ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இந்த சந்திப்பு புரட்சிக்காகவோ, கவர்ந்திழுக்கவோ அல்ல; எனது புரிதல் மற்றும் எனது கல்விக்காக மட்டுமே.
குடியரசில் குடிமக்களை உயர்த்த வேண்டும். அதை நோக்கி என் பயணம் இருக்கும். நாம் சேர்ந்து தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். கரம் கோர்த்திடுங்கள்; களத்தில் சந்திப்போம். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து வெளியிட்டுள்ள நிலையில், தற்போது கமலும் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(15)