பொலிஸாரின் அசமந்த போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)
தெனியாய பொலிஸாரின் அசமந்த போக்கைக் கண்டித்து பல்லேகம பிரதான வீதியை மறித்து 18.05.2015 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்லேகம பிரதான வீதியில் அமைந்துள்ள தையல் கடையொன்றினுள் கடந்த 11 ஆம் திகதி இரவு 09 மணியளவில் நுழைந்த இனந்தெரியாத ஆயுதக் கும்பல் ஒன்று கடையை அடித்து சேதப்படுத்தியிருந்தது. அத்துடன் கடையிலிருந்த பெண்ணையும் கிரிக்கட் மட்டையால் அடித்துக் காயப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று வந்ததைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாததால் 18.05.2015 அன்று பாதிக்கப்பட்ட பெண் தெனியாய பல்லேகம பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
மேலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வந்த தெனியாய பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விரைவில் கவனம் எடுக்கப்படும் என பொலிஸார் வாக்குறுதி வழங்கியதைத் தொடர்ந்தே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தவர்கள் குறித்த பகுதியிலிருந்து கலைந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.











