போர்க்காலச் செய்தியாளர் தில்லைநாதனின் ஊடக வகிபாகம்

-பல நாளிதழ்களுக்குச் செய்தியாளராகப் பணியாற்றியிருந்தாலும் ஒரு செய்தியை பல வடிவங்களில் வெவ்வேறான முறைகளில் எழுதும் வல்லமை இவரிடம் உண்டு. இன்று ஒரு செய்தியை அப்படியே பிரதி செய்து அனைத்துச் செய்தி இணையங்களும் வெளியிடுகின்றன. சில பிரதான அச்சு ஊடகங்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதுதான் வேதனை-
நாளிதழ்கள், ஞாயிறு வார இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் போன்றவைகளுக்குச் செய்திகளைச் சேகரித்துத் தொகுத்து வழங்கும் பணிகளைச் செய்பவர்கள் செய்தியாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள். பிராந்தியங்களில் இருந்து செய்திகளை அனுப்பும் செய்தியாளர்களை நிருபர்கள் என்ற அடைமொழி கொண்டும் அழைப்பர்.
இவர்கள் நேர்காணல், கவனித்தல் மற்றும் ஆய்வுசெய்து ஊடாகச் செய்திகளைச் சேகரிப்பார்கள். 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் ஊடகத்துறையில் செய்தியாளர்களாகப் பணிபுரிவோருக்கு இலங்கையில் ஊடகத்துறைப் பட்டப்படிப்புகள் மற்றும் ஊடகக் கற்கை நெறிகள், பயிற்சிகள் என்று பல திட்டங்கள் உண்டு. ஆனால் அதற்கு முந்திய காலாத்தில் அதுவும் 1950 களில் செய்தியாளர்களுக்குப் பயிற்சிகள் என எதுவும் இருந்ததில்லை.
இவ்வாறானதொரு சூழலில் அன்று செய்தியாளர்களாகப் பணியாற்றியோர் செய்தி சேகரிப்பதற்குரிய பயிற்சிகளையும் நுட்பங்களையும் தத்தமது சொந்த அனுபங்களைக் கொண்டே பெற்றிருந்தனர்.
அவ்வாறு சொந்த முயற்சிகள், தேடல்கள் மூலம் செய்தியாளர்களாகத் தம்மை வளர்த்துக் கொண்ட குறிப்பிட்ட சிலரில் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த சின்னத்துரை தில்லைநாதன் முக்கிய இடம் வகிக்கிறார். இந்த மாதம் இருபத்தியொன்பதாம் திகதி அவருக்கு வயது எழுபத்து மூன்று.
அனுபவங்கள், தேடல்கள் மூலம் தன்னை வளர்த்துக்கொண்ட தில்லைநாதன், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் அகிம்சை வழியில் ஆரம்பமாகிப் பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறிய காலப் பகுதிகளில் சிரமங்களுக்கு மத்தியில் தனது செய்திப் பணியை முன்னெடுத்திருந்தார்.
சுமார் ஐம்பத்து ஐந்து வருட ஊடக அனுபவம் அவருக்கு உண்டு. அதுவும் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டு அப் பணியை அவர் ஆற்றியிருக்கிறார். போருக்கு முந்திய காலம், போர்க்காலம், போருக்குப் பிந்திய காலம் என்ற மூன்று வகைகளுக்குள் அவருடைய ஊடகப் பணி நீண்டு செல்கிறது. குறிப்பாக 1968 இல் ஆரம்பமான அவருடைய செய்திப் பணி இன்றுவரை தொடருகிறது. இப்போதும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்.
செய்தியாளர்களை அவர்கள் பணியின் இயல்பு, பணியமைப்பு, தொழில் திறன் ஆகிய மூன்று பிரிவுகளில் நான்கு வகைப்படுத்தலாம்.
முதலாவது- நகரச் செய்தியாளர், அதாவது செய்தித்தாள், தொலைக்காட்சி ஊடகம் அமைந்துள்ள நகரங்களில் செய்திகளைத் திரட்டும் செய்தியாளர். இவர்களை உள்ளுர்ச் செய்தியாளர் என்றும் அழைக்கலாம்.
இரண்டாவது- நகர்ப்புறச் செய்தியாளர், அதாவது மாகாணங்கள், மாவட்டங்களில் இருந்து தலைநகரத்தில் உள்ள செய்தி நிறுவனங்களுக்குச் செய்திகளைச் சேகரித்து அனுப்பும் செய்தியாளர்.
மூன்றாவது- தேசியச் செய்தியாளர், அதாவது தலைநகரிலிருந்து செய்திகளைச் சேகரித்து அனுப்பும் செய்தியாளர். தலைமை அலுவலகத்திற்குள் இருந்து பணியாற்றுவோரையும் குறிப்பிடலாம்.
நான்காவது- வெளிநாட்டுச் செய்தியாளர், அதாவது வெளிநாடுகளில் தங்கியிந்து உலகச் செய்திகளைச் சேகரித்து அனுப்பும் செய்தியாளர்.
ஆகவே இந்த நான்கு வரையறைகளுக்குள் தில்லைநாதன், நகர்புறச் செய்தியாளர் என்ற என்பதற்குள் அடங்குகிறார்.
தமிழ் ஊடகத்துறையைப் பொறுத்தவரை பிராந்தியச் செய்தியாளர்களுக்கு அதுவும் வடக்குக் கிழக்கில் பணியாற்றிய செய்தியாளர்களே முக்கியத்துவம் பெறுகின்றனர்.
ஏனெனில் போர்க்காலம் என்பதும் இலங்கை அரசாங்கத்துக்கு அரசியல் – பொருளாதார ரீதியாகத் தொடர்ச்சியாக நெருக்குவாரம் கொடுக்கும் பிரதேசமாகவும் வடக்குக் கிழக்கு இருந்தது. இப்போதும் கூட நிலைமை அதுதான். யாழ்ப்பாணத்தில் தில்லைநாதன் பணியாற்றிய காலத்திற்கு முன்பிருந்தே நாளிதழ்கள், வார இதழ்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
தற்போது இரண்டு இலத்திரனியல் ஊடகங்களும் ஐந்து நாளிதழ்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன. தலைமை அலுவலகங்களும் யாழ்ப்பாணத்திலேயே உண்டு.
அத்துடன் கொழும்பில் இருந்து அன்று வெளிவந்த மித்திரன், சிந்தாமனி ஆகிய வார இதழ்களுக்கும் இவர் செய்திக் கட்டுரைகளை எழுதியிருந்தார். பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து 1985 இல் வெளிவந்த உதயன் பத்திரிகையிலும் நகர்ப்புறச் செய்யதியாளராகப் பணியாற்றி மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை இவர் வெளிக்கொணர்ந்தார்.
ஆரம்பத்தில் புலோலி செய்தியாளராகப் பணியாற்றிப் பின்னர், வடமராட்சிச் செய்தியாளராகவே தில்லைநாதன் தன்னை அடையாளப்படுத்தினார். ஆனால் யாழ் நகரச் செய்திகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறும் சம்பவங்கள், நிகழ்வுகளை அவர் எழுதியிருந்தர்.
குறிப்பாக அன்று ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் தொடர்பான செய்திகள் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புகள் பற்றிய செய்திகளுக்கே அவர் முக்கியத்துவம் கொடுத்திருந்திருந்தார்.
1981 இல் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரைக் கைசெய்த செய்தியை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய தில்லைநாதன், ஆரம்பத்தில் பொலிஸார் வழங்கிய தகவல் பிழை என்பதை அறிந்து பின்னர் உண்மையைத் தெரிந்துகொண்டார்.
அதாவது வடமராட்சி மணற்காட்டில் கள்ளக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரைக் கண்டதும் தமக்குத் தாமே துப்பாக்கியால் சுட்டு இறந்ததாகவே பொலிஸார் முன்னர் செய்தி வழங்கியிருந்தனர்.
இது வீரகேசரியில் தலைப்புச் செய்தியாகப் பிரசுரிக்கப்பட்டு அச்சிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் குட்மணி, தங்கத்துரை ஆகிய இருவரும் கைது என்ற உண்மையான தகவலை தில்லைநாதன் அன்று மாலை உறுதிப்படுத்தினார். உடனடியாக கொழும்புத் தலைமை அலுவலகத்துக்கு அறிவிக்கப்பட்டது.
அச்சிட்டுக் கொண்டிருந்த இயந்திரம் நிறுத்தப்பட்டது. சுமார் பத்தாயிரம் பிரதிநிகள் வரை அச்சிடப்பட்டும்விட்டன. ஆனால் அத்தனை பிரதிகளும் வெளியே வரவிடாமல் தடுக்கப்பட்டன. பின்னர் குட்டிமணி, தங்கத்துரை கைது என்ற செய்தி பிரதான தலைப்புச் செய்தியாக மீள அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன.
அப்போது பிரபல செய்தியாளரான செல்லத்துரை மற்றும் தில்லைநாதன் ஆகிய இரண்டு செய்தியாளர்களின் பெயர்களுடனும் அச் செய்தி பிரசுரமானது. இச் செய்தியை வெளியிட்டதால் இருவருக்கும் அச்சுறுத்தலான நிலையும் அப்போது இருந்தது.
1975 இல் யாழ் பருத்துறையில் இடம்பெற்ற காணிவேல் என்ற களியாட்ட நிகழ்வில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச் செய்தியை வீரகேசரியில் வெளியிட்டமைக்காகத் தில்லைநாதன் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டார்.
ஆனால் அப்போதைய நகர சபைத் தலைவர் அமரர் சட்டத்தரணி நடராஜா நீதிவானுக்கு அறிவித்துத் தில்லைநாதனுக்குப் பாதுகாப்பு வழங்கியிருந்தார்.
பல நாளிதழ்களுக்குச் செய்தியாளராகப் பணியாற்றியிருந்தாலும் ஒரு செய்தியை பல வடிவங்களில் வெவ்வேறான முறைகளில் எழுதும் வல்லமை இவரிடம் உண்டு. இன்று ஒரு செய்தியை அப்படியே பிரதி செய்து அனைத்துச் செய்தி இணையங்களும் வெளியிடுகின்றன. சில அச்சு ஊடகங்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதுதான் வேதனை.
ஆனால் அன்று தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடையாத காலத்தில் கையால் எழுதித் தபாலிலும் பின்னர் தொலை நகல் ஊடாகவும் (Fax Machine) செய்திகளை இவர் அனுப்பியிருந்தார்.
இவர் அன்று எழுதிய செய்திகள் அநேகமாகக் கையெழுத்துப் பிரதிகள்தான். அவசரமான செய்திகளை மாத்திரமே தொலைபேசியில் வழங்குவார்.
கொழும்பில் உள்ள வீரகேசரி தலைமை அலுவலகத்துக்குத் தொலைபேசியில் செய்தி ஒன்றை வழங்கப் பல மணிநேரம் காவல் காத்திருக்க வேண்டிய சூழல் அப்போது இவருக்கு ஏற்பட்டிருந்தது.
அக்காலத்தில் ஒரு உயர் அரச அதிகாரியிடமே தொலைபேசி இருக்கும். அதில் பேசுவதற்கு மக்கள் பலரும் வரிசையில் காத்திருக்கும் நிலையில் செய்தி ஒன்றை வழங்கப் பல மணிநேரம் வரிசையில் இவர் காத்திருந்திருக்கிறார்.
1968 இல் ‘செய்தி’ என்ற வார இதழில் பணியாற்றியபோது மலையகக் கல்வி தொடர்பான கட்டுரை எழுதி முதலாவதாகத் தெரிவாகி ஐம்பது ரூபா பரிசுத் தொகையைப் பெற்றிருந்தார்.
அக் காலத்தில் ஐம்பது ரூபா என்பது மிகப் பெறுமதியான ஒரு தொகை. சுவீப் ரிக்கற் மூலம் பெறப்பட்ட பணத்தைக் கொண்டு மலையக மாணவர்களின் கல்விக்குச் செலவிட முற்பட்டதைக் கண்டித்து எழுதியிருந்த தில்லைநாதன், சூதாட்டப் பணத்தில் கல்வியா என்று விமர்சித்திருந்தார் ‘வடக்கில் இருந்து ஒரு குரல்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை அன்று மலையக தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்திருந்தது.
அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாசகர்களை வாசிக்கத் தூண்டும் வகையில் செய்தியும் அதன் தலைப்பும் இருக்க வேண்டும். செய்தியின் சாரத்தைக் கூறுவதாகவும், செய்தியை விளம்பரப் படுத்துவதாகவும் தலைப்பு அமைய வேண்டும்.
தில்லைநாதன் எழுதும் செய்தியின் தன்மை, வாசகனைத் தூண்டக்கூடிய தலைப்பை மிக இலகுவாக இடக்கூடியதாக இருக்கும். அது தலைப்பை மட்டும் வாசிக்கும் வாசகர்களுக்குச் செய்தியைச் சுருக்கியும் தருகின்றது.
மக்களிடம் பேரார்வத்தைத் தூண்டக் கூடியதே ‘செய்தி’ என்கிறார் வில்லியம் கான்ஸ்வெனார் பிளேர் (William Consvenor Blayer) என்னும் இதழியலாளர். வாசகனுடைய ஆளுமை வளர்ச்சிக்கும் செய்தி தூண்டுகோளாக இருக்க வேண்டும் என்று பொருள்கொள்ளலாம்.
எனவே தில்லைநாதன் எழுதும் செய்தி அவருக்கு மாத்திரமல்ல, வாசகனுக்கும் ஆளுமையைக் கொடுத்திருக்கிறது. அத்துடன் பிராந்தியச் செய்தியாளர்கள், எந்த ஒரு விடயத்திலும் தாக்கத்தைச் செலுத்தக் கூடியவர்கள் என்பதற்குத் தில்லைநாதனின் செய்திப் பணியும் ஓர் முன்னுதாரணமாகிறது.
வீரகேசரியில் 1970 களில் வெளிவந்த ‘மக்கள் குறைகளும் அதற்கான தீர்வுகளும்’ என்ற தலைப்பில் பிரசுரமான செய்திக் கட்டுரைப் பகுதியில் தில்லைநாதன் எழுதிய கட்டுரைகள் பல முன்னுதாரணங்களைக் கொடுத்திருக்கின்றன. கொழும்புத் தலைமையகத்தில் அதற்குப் பொறுப்பாக இருந்த உதவி ஆசிரியர் சோ. இராமேஸ்வரன் தற்போது கனடவாவில் வாழ்கிறார்.
தில்லைநாதனுக்கு மூன்று பெண் பிள்ளைகள். உயர்கல்வி கற்றுத் தற்போது நல்ல நிலையில் இருப்பதற்குக் காரணம் தில்லைநாதனின் அர்ப்பணிப்புள்ள ஊடக வகிபாகம் என்றால் அது மிகையாகாது.
1968 இல் கண்டியில் இருந்து வெளிவந்த ‘செய்தி’ என்ற வார இதழின் ஆசிரியராக மட்டக்களப்பைச் சேர்ந்த அமரர் கே.ஜி மகாதேவா கடமையாற்றியிருந்தார்.
முன்னர் யாழ்ப்பணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்னர் மீண்டும் ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் கடமையாற்றியிருந்தார்
தமிழகத்தைச் சேர்ந்த அமரர் ராமு நாகலிங்கம் என்பவர் செய்தி என்ற வார இதழின் உரிமையாளர். இவருடைய மகளைக் கொழும்புப் பல்கலைக்கழகக் கல்விப் பீடாதிபதி பேராசிரியர் அமரர் சோ. சுந்திரகேசரம் திருமணம் முடித்திருந்தார்.
-அ.நிக்ஸன்-


