செய்திகள்

மகாவம்சத்தை புறம்தள்ளி மதசார்பற்ற அரசு நிறுவப்பட வேண்டும்! நல்லிணக்க செயலணியிடம் முறைப்பாடு

மகாவம்சத்தை புறம்தள்ளி மதசார்பற்ற அரசு நிறுவப்பட வேண்டும் என நல்லிணக்க பொறி முறை தொடர்பில் கருத்தறியும் செயலணியிடம் குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் சாட்சியமளித்த எஸ்.தெய்வேந்திரம்பிள்ளை என்ற குடும்பஸ்தரே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்,

இந்த நாட்டில் அரசாங்கம் மனிதாபிமான போர் எனக் கூறி மனிதாபிமான அற்ற போர் ஒன்றினை நடத்தியது. இதில் மோசமான முறையில் அரசாங்கப் படைகள் நடந்து கொண்டன. இந்த அரசாங்கத்துடன் இணைந்து பல நாடுகள் விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இந்த போருக்கு உதவின. கொத்துக்குண்டுகள் வீசப்பட்டன. அதை நாம் கண்களால் கண்டோம். இந்தப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும். தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா அவர்கள் கொண்டு வந்த நீதிபொறிமுறை தொடர்பில் எமது நாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். அதுவே ஓரளவு நீதியைத் தரக்கூடிய பொறிமுறை.

1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னிருந்து இந்த நாட்டில் பௌத்த தேசியவாதம் வளர்ந்து விட்டது. மகாவம்சம் ஒரு இதிகாசம். அது வரலாற்று நூல் இல்லை. அதை அடிப்படையாக் கொண்டு இங்கு ஆட்சி மேற்கொள்ளப்படுகிறது. பௌத்த தேசியவாதத்தை இரும்பு கோட்டை போன்று அவர்கள் கருத்துகிறார்கள். அதனால் தான் பௌத்த பிக்குகள் கூட அத்துமீறி செயற்படுகிறார்கள். அந்த நிலை மாற வேண்டும். அனைத்து மதங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு மதச்சார்பற்ற அரசு நிறுவப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம். இது திம்பு கோட்பாட்டில் கூட ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அதனை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் இறந்தவர்கள் தொடர்பில் நினைவுகூர அனுமதி வேண்டும். மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்பட்ட இடங்களில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்கப்பட்டு இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்க வேண்டும். இதன்மூலம் தான் நல்லிணக்தை ஏற்படுத்த முடியும்.

N5