செய்திகள்

மட்டக்களப்பு கரையோர கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீர் : அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பு மாவட்ட கரையோரப் பகுதியில் கடல் நீர் உட்புகுந்ததால் கரையோர பகுதி மக்கள் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது .

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட நாவலடி ,டச்பார் பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கடலிருந்து பாரிய இரைச்சலுடன் கடல் நீர் நிலப்பகுதிக்குள் உட்புகுந்துள்ளது .

இதன் காரணமாக கடல் நீர் தங்களின் வீடுகள் இருக்கும் இடத்தை நோக்கி வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறியதாககவும் அதேவேளை அப்பகுதியில் நேற்றிரவு பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா கடல் நீர் உட்புகுந்த நாவலடி பகுதியை இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் .

இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் வினவிய போது அவர் கருத்து தெரிவிக்கையில் குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் இப்பகுதியில் கடல் நீர் உட்புகுந்ததால் அச்சத்தின் காரணமாக கரையை அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்புக்காக தங்களது உறவினர்களின் வீடுகளுக்கு சென்று தங்கியுள்ளதாக தெரிவித்தார் .

இந்த கடல் நீர் உட்புகுந்ததால் எதுவித இழப்புகளும் ,பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை உறவினர்களின் வீடுகளுக்கு சென்றவர்கள் இன்று முற்பகல் தொடக்கம் தமது வீடுகளுக்கு திரும்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கல்முனை மற்றும் திருக்கோவில் பகுதிகளிலும் கடல் நீர் நிலப்பகுதிகளுக்குள் புகுந்தமை குறிப்பிடத்தக்கது.

694040f6dbafc3f3f1489d3a31dd17f6_XL

IMG_0182 IMG_0197 IMG_0223 IMG_0226Untitled ;