செய்திகள்

மத்திய அரசாங்கம் வடக்கில் மேற்கொள்ளும் அபிவிருத்திகளை வடமாகாணசபையுடன் பேசி செய்ய வேண்டும்! முதலமைச்சர் சி.வி

மத்திய அரசாங்கம் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகளை வடமாகாண சபையுடன் பேசி செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, சிதம்பரபுரம் முகாம் மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

1990 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரமேதாச அவர்களின் வழிகாட்டலின் கீழ் அப்போது இலங்கையில் ஏற்பட்ட தற்காலிக சமாதானத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்தானிகராலயம் இந்தியாவில் இருந்து அகதிகளை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தது. அவ்வாறு கொண்டு வரப்பட்ட மக்களை குடியமர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது தான் ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள இந்த சிதம்பரபுரம் முகாம். இங்கு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டனர். இங்கிருந்த மக்கள் சாமாதான காலப்பபகுதிகளில் படிப்படியாக தமது இடங்களுக்கு சென்று மீள்குடியேறி வந்த நிலையில் ஏறத்தாழ 200 குடும்பங்கள் இங்கேயே வசித்தனர். அப்போது அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகைகளில் அவர்கள் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

தங்களை நிரந்தரமாக குடியேற்றுமாறு பலவித கோரிக்கைகளை முன்வைத்த போதும் அது நிறைவேறவில்லை. வடமாகாண சபை நிறுவப்பட்ட பின்னர் இம் மக்களின் பிரச்சனை தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சர் எனது கவனத்திற்கு கொண்டு வந்தார். அதன்பின்னர் நானும் நேரடியாக வந்து உங்களை சந்தித்திருந்தேன். இது தொடர்பில் மத்திய அரசாங்கத்திற்கும், அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியிருந்தோம். அதன்பயனாக மாகாணமும், மத்தியும் மனமுவந்து மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டமையால் இம் மக்களுக்கு 6 பரப்பு காணி வழங்கப்பட்டு உறுதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது. புதிய கிராமம் ஆகையால் இம் மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

மத்திய அரசாங்கம் வடக்கு பகுதியில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கின்ற போது மாகாணசபையுடன் கலந்து பேசி செய்வது நல்லது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. இது பற்றி அவர்களிடம் கேட்டால் அவர்கள் பிரதம செயலாளரிடம் தெரிவித்தாக கூறுகிறார்கள். எமது அலுவலர்கள் வினைத்திறன் மிக்கதாக வேலை செய்கிறார்கள். ஆனால் அரசியல் ரீதியாக செய்யப்படுகின்ற வேலைகளை எம்முடன் பேசாது அவருடன் பேசி செய்ய முடியாது. ஏனெனில் அவர் அரசியல் பேச முடியாது. எனவேஇ வடக்கில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களை எம்முடன் கலந்து பேசி மேற்கொள்வதே நல்லது எனத் தெரிவித்தார்.

N5