மத்திய மாகாண சபை உறுப்பினர்களின் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு தடை : ஒரு குழு ஏற்கனவே வெளிநாடு புறப்பட்டது
வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவிருந்த மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் 40 பேரின் பயணத்தை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் அவர்களில் 20 பேர் கொண்ட குழுவினர் ஏற்கனவே கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளமையினால் அவர்களின் பயணத்தை நிறுத்த முடியாது போயுள்ளதாகவும் ஆனால் அதற்கு அடுத்ததாக செல்லவிருந்த குழுவினரின் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண ஆளுனர் நிலுகா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனக்கு அறிவிக்கவில்லையெனவும் இவ்வாறான பயணங்களை அனுமதிக்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் ஆளுனர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண சபையில் நிதி நெருக்கடி இருக்கும் நிலையில் 4 கோடி ரூபாய்க்கும் மேல் செலவழித்து இவர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலா செல்ல நடவடிக்கையெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)




