மனோ கணேசன் கூட்டமைப்பு தலைவர்கள் திடீர் சந்திப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசனுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீகாந்தா ஆகியோருக்கும் இடையில் சந்திப்பு இன்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைமையகத்தில் இடம்பெற்றது.
அவசர ஏற்பாட்டில் நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் கருத்து கூறியதாவது,
கூட்டமைப்புக்கும், எமது கட்சிக்கும் இடையில் நீண்ட காலமாக நல்லுறவு நிலவுகின்றது. இது ஒரு அவசர சந்திப்பு. கூட்டமைப்பு தங்களது ஆசன பங்கீடுகளை சிறப்பான முறையில் செய்து முடித்துள்ளதை அறிந்து நமது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டோம். அதேவேளை தெற்கில் எமது கூட்டணி ஐக்கிய தேசிய கட்சியுடன் நடத்தி வரும் பேச்சுக்கள் தொடர்பில் நாம் கருத்து பறிமாறிக்கொண்டோம்.
தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா அனுப்பி வைத்துள்ள செய்தியை அடிப்படையாக கொண்டே இன்றைய பேச்சுக்கள் இடம்பெற்றன. இந்த பேச்சுவார்த்தைகளை தொடர நாம் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் தற்சமயம் இதைவிட பகிரங்கமாக கருத்து கூற முடியாதுள்ளது.




