மன்னார் மாந்தை மர்மக்கிணற்றினுள் மறைந்திருந்த மர்மம் என்ன???
நேரடி றிப்போட்- எஸ்.வினோத்……
யுத்தத்தின் வடுக்களை சுமந்த மக்கள் இன்று தமது இயல் வாழ்க்கையை ஆரம்பிக்கத்தொடங்கியுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் போதும் யுத்தம் நிறைவடைந்த பின்பும் காணாமல் போன,கடத்தல் சம்பவங்கள் அதிகரித்த நிலை காணாப்பட்டது.
கடத்தப்பட்ட ஒரு சிலர் விடுவிக்கப்பட்டனர்.மேலும் சிலர் ஆங்காங்கே சடலங்களாக மீட்கப்பட்டனர்.ஆனால் ஏனையவர்களின் நிலை என்ன? என்பதே காணாமல் போனவ்hகளின் உறவினர்களின் கேல்வி.
காணாமல் போன தனது பிள்ளைகளையும், கணவன்மார்களையும்,உறவுகளையும் தேடிக்கொண்டிருக்கும் உறவுகளுக்கு இது வரை நீதியும்,நிம்மதியும் கிடைக்கவில்லை.
தமது பிள்ளைகளை கடத்தியர்வகளை நல்லாட்சி அரசில் அடையாளம் காட்டியுள்ள போதும் இந்த அரசு மௌனம் சாதித்துக்கொண்டிருப்பதை சர்வதேசம் தமது மாயக்கண்களினால் பார்த்துக்கொண்டிருப்பதாக உறவுகளை பிரிந்து துன்பத்தில் தவிக்கின்ற உறவுகள் விமர்சிக்கின்றனர்.
காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டதே மனித புதைகுழி. சர்வதேச ரீதியில் ஓர் சர்ச்சையை ஏற்படுத்தி சர்வதேசத்தை திசை திருப்பிய ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி திருக்கேதீஸ்வர ஆலய பகுதியூடாக மாந்தை பகுதிக்கு குடி நீரை வழங்கும் வகையில் குறித்த பகுதியூடாக வீதிக்கு அருகில் தோண்டப்பட்டு குடி நீர் குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள தோண்டப்பட்ட குழியில் இருந்து வெளி வந்த எலும்புத்துண்டுகளை வைத்தே குறித்த மனித புதை குழி அடையாளம் காணப்பட்டது.
மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக குறித்த மனித புதைகுழி கட்டம் கட்டமாக தோண்டப்பட்டது.
அப்போது அதிர்ச்சியூட்டும் வகையில் மர்மங்கள் வெளிவர தொடங்கியது.
தொடர்ச்சியாக குறித்த மனித புதை குழி தோண்டப்பட்டப்பட்டது.
கடந்த 23-12-2013 தொடக்கம் 05-03-2014 வரையிலான காலப்பகுதியில் 33 தடவைகள் நீதவான் முன்னிலையில் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த அகழ்வுகளின் போது சுமார் 84 மனித மனித மண்டையோடுகள் மற்றும் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட மனித எலும்புகளின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக சட்டத்தரணிகள் மனித புதைகுழிக்கு அருகில் மர்ம கிணறு ஒன்று காணப்படுவதாகவும் குறித்த கிணற்றை அடையாளம் கண்டு அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
இதற்கமைவாக கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் சந்தேகத்திற்கிடமான குறித்த மர்ம கிணறு அடையாளம் காணப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதோடு,தற்காலிகமாக குறித்த பிரதான வீதி போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது.
மேலும் குறித்த மர்ம கிணற்றின் அகழ்வு பணிகளை மேற்கொள்ள மன்னார் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.எனினும் அன்றைய காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழையின் காரணமாக குறித்த பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது.
அதன் காரணத்தினால் அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டது. இந்த நிலையில் குறித்த மர்ம கிணறு தொடர்பான விசாரனைகள் மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் கடந்த யூன் மாதம் 4 ஆம் திகதி வசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது குறித்த கிணற்றின் அகழ்வு பணிகளை மேற்கொள்ள சகல வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் சட்ட வைத்திய அதிகாரி சமூகமளிக்காததன் காரணத்தினால் குறித்த அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் குறித்த மர்ம கிணறு தொடர்பாக விசானை மீண்டும் கடந்த 1 ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு குறித்த மர்ம கிணற்றின் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் அனைவரும் மாந்தை மர்ம கிணறு காணப்பட்ட இடத்திற்கு பிரசன்னமாகி இருந்தனர்.
இதன் போது அன்றைய தினம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன்,திருமதி ரனித்தா ஞானராஜா மற்றும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக சட்டத்தரணிகளான எம்.சபூர்தீன் மற்றும் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் குறித்த மர்ம கிணறு தோண்டும் இடத்திற்கு பிரசன்னமாகி இருந்தனர்.
கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலான நான்கு தினங்கள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மன்னார் மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் டபில்யு.ஆர்.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த அகழ்வு நடவடிக்கைகளின் போது குறித்த கிணற்றில் இருந்து தடையப்பொருட்களாக எலும்புத் துண்டுகள்,பல்,பயண்படுத்தாத துப்பாக்கி ரவை,முள்ளுக்கம்பிகள், 1994 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 25 சத நாணாயக்குற்றி ஒன்று, 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலாவதி திகதியிடப்பட்ட 145 ரூபாய் பெறுமதி அச்சிடப்பட்ட பியர் டின் ஒன்று, வீதி அபிவிருத்திக்கான பாரிய கற்கள், வாகனங்களுக்கு பயண்படுத்தும் ஒயில் சீல்,எலும்பு ஓட்டு எச்சங்கள் ஒரு தொகுதி, யூ வடிவிலான கம்பி,சில்வர் கரண்டியின் கைபிடி போன்றவை தடயப்பொருட்களாக குறித்த கிணற்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட தடையப்பொருட்கள் அனைத்தும் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு பகுப்பாய்வு அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெறவுள்ள மர்மக்கிணறு தொடர்பான விசாரனைகளின் போது மன்றில் சமர்ப்பிக்கப்படும்.
காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்களின் நிலை இது வரை என்ன என்று தெரியாக நிலையில் குறித்த மர்மக்கிணற்றின் அகழ்வுகளின் போது பாரிய தடையங்கள் எதுவும் காணப்படாமை காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
-காணாமல் போன கடத்தப்பட்டவர்கள் எங்கே ஓர் இடத்தில் அல்லது இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர்களின் உறவினர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.அவர்க்ளின் நம்பிக்கை வீண் போகாத நிலையில் நல்லாட்சி அரசு மனித நேயத்துடன் செயல் பட வேண்டும்.
-காணாமல் போன,கடத்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இதற்கு நல்லாட்சி அரசிற்கு கைகொடுத்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு நல்லாட்சி காலத்தில் நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க விரைந்து செயற்பட வேண்டும்.என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு.இதற்கு சர்வதேச சமூகம் ஆதரவு வழங்கும் என்பது ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
.
N5












