செய்திகள்

மலையக தோட்டப்பகுதி முதலாவது கிராமத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

மலையக தோட்டப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது கிராமத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் அக்கரபத்தனை ஊட்டுவில் தோட்டத்தில் 150 தனித்தனி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அவற்றில் முதற்கட்டமாக 71 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அதனை 09.02.2017 அன்று ஜனாதிபதி திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளித்தார்.

மலையக புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் எண்ணக்கருவிற்கு அமைய, லயன் வீடுகளுக்கு மாற்றாக இந்த புதிய பெருந்தோட்ட கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ் தனி வீடுகள் 7 பேர்ச்சஸ் காணியில் 550 சதுர அடியில் இரண்டு அறைகள், சமையலறை, வரவேற்பறையுடன் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வீட்டிற்கான மின்னிணைப்பு மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

வீட்டு உரிமையாளர்கள் அனைவருக்கும் “பசுமை பூமி” திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரம்  வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது காணி உறுதி பத்திரம் வழங்குவதன் ஞாபகார்த்தமாக முத்திரை வெளியிடும் நிகழ்வு இடம்பெற்றதோடு, பயனாளிகளுக்கு மரக்கன்று மற்றும் வீட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

மலையகத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் ஆங்கிலேயர் நிர்மாணித்த லயன் குடியிருப்புக்களிலேயே இதுவரை வாழ்ந்து வந்தனர்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததை அடுத்து 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 411 வீடுகளை நிர்மாணித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.DSC00003 DSC00005 DSC00014 DSC00017 IMG_5572 IMG_5596 IMG_5604 IMG_5619 IMG_5626 IMG_5634

n10