மீள் குடியேற்றம் செய்யப்படும் மன்னார் பகுதிக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விஜயம்
மன்னார் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச் சாட்டுகள் தொடர்பில் விடயங்களை நேரில் கண்டறியும் கள விஜயம் ஒன்றினை நேற்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG ) மேற்கொண்டது.
மன்னார் முசலி பிரதேசத்தில் முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்காக வில்பத்து சரணாலய காட்டுப்பகுதி அழிக்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு கடந்த சில வாரங்களாக பலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ள இவ்விடயம் தொடர்பில் உண்மையைக் கண்டறிவதற்காகவே இந்தக் கள விஜயம் மேற்கொள்ப்பட்டது.
NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்இ அதன் தலைமைத்துவ சபை உறுப்பினரான சகோ. முஜீபுர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் இன்று முசலி பிரதேசத்தில் அமைந்துள்ள மறுச்சிகட்டி மரைக்கார் தீவு மற்றும் ஜாஸிம் நகர் போன்ற பகுதிகளுக்கு விஜயம் மேற் கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்தின் போது முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்பட்டு வரும் இடங்களை நேரில் பார்வையிட்டதுடன் அங்கு குடியேறியுள்ள பொது மக்கள் பலரையும் சந்தித்து விடயங்களை கேட்டறிந்து கொண்டனர்.
இவ் விஜயத்தின் போது அவதானிக்கப்பட்ட மற்றும் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இவ்விடயம் தொடர்பிலான உத்தியோக பூர்வ அறிக்கை யொன்றினை NFGG எதிர்வரும் நாட்களில் வெளியிடவுள்ளது.










