செய்திகள்

‘அ.தி.மு.க.வில் இதே நிலை நீடித்தால் அதிரடி முடிவை எடுப்பேன்’ நடிகை லதா அறிக்கை

‘‘அ.தி.மு.க.வில் இதே நிலை நீடித்தால், அதிரடி முடிவை எடுப்பேன்’’ என்று நடிகை லதா கூறியிருக்கிறார்.
நடிகை லதா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
அறிக்கை
இப்பொழுது அ.தி.மு.க.வில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. எம்.ஜி.ஆர். கட்சியை உருவாக்கும் பொழுது உடனிருந்து அவர் பட்ட கஷ்டங்களை பார்த்தவள் நான்.
ஆனால், இப்பொழுது அவர் பட்ட கஷ்டங்கள் வீணாகிவிடுமோ என்கிற கவலை எனக்கு மேலோங்கி உள்ளது. அவர் கட்சியை உருவாக்கியதே மக்கள் சேவைக்காக மட்டும் தான். அதனை முன்னிறுத்தாமல் செயல்பட்டதன் விளைவே இந்த நிலைமை என்று தோன்றுகிறது.
சசிகலா பதவிஏற்க அவசரப்படுவது ஏன்?
ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு கட்சியின் கழக பொதுச்செயலாளர் யார் என்ற குழப்பம் நீடித்தாலும், ஆட்சிமுறை என்று வந்தபோது ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி ஓ.பன்னீர்செல்வம் திறம்பட செயல்பட்டு வந்தார்.
திறம்பட ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து, தற்போதைய கழக பொதுச்செயலாளர் முதல்வராக அவசரப்படுவதற்கு என்ன காரணம்?, அதற்கான அவசியம் என்ன?, அந்த அவசரத்தின் விளைவு தான் இன்று ஆட்சியில் இருக்கும் நம் கட்சி உடையக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
அதிரடி முடிவு…
மக்களின் பேராதரவுடன் இரண்டாம் முறையும் ஆட்சியில் அமர்ந்த நம் கட்சியினை ஆச்சரியத்துடன் பார்த்த அனைவரும், இன்று கட்சியின் நிலையையும், ஒற்றுமையின்மையும் அதிர்ச்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழகம், இந்தியாவைத் தாண்டி உலகமே நம் கட்சியினை கேலிக்கூத்தாக பார்க்கும் நிலையை உருவாக்கிவிட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சிக்கு வந்த இந்த நிலையை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மூத்த நிர்வாகிகள், முக்கியப் பொறுப்பாளர்களிடம் இருந்த நம்பிக்கையில் தான் அறிக்கையின் வாயிலாக வேண்டுகோள் மட்டும் வெளியிட்டு வந்தேன்.
இந்த கட்சியைக் காப்பாற்றும் கடமை எனக்கும் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் கட்சிக்கு என் கடமையை செய்யும் பொருட்டு, அதிரடி முடிவினை எடுக்கவும் தயங்க மாட்டேன்.
இவ்வாறு லதா அறிக்கையில் கூறியுள்ளார்.
N5