செய்திகள்

நாளை சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார் மோடி! மாவோயிஸ்டுக்கள் எதிர்ப்பு

நாளை சத்தீஸ்கர் செல்லும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவோயிஸ்டுகள் சாலைகளின் குறுக்கே மரங்களை வெட்டி போட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை சத்தீஸ்கர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது, ஜவங்கா என்ற இடத்துக்கு செல்லும் மோடி, அங்குள்ள 700 பழங்குடியின மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

மேலும், டில்மிலி என்ற இடத்தில் ரூ.1,800 கோடி செலவில் உருவாக இருக்கும் உருக்கு ஆலைக்கான ஒப்பந்தம், ராவ்காட்–ஜக்தால்பூர் இடையே ரூ.140 கோடி செலவில் அமைக்கப்படும் ரெயில்பாதை திட்டத்துக்கான ஒப்பந்தம் ஆகியவை பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்தாகின்றன. இந்நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியுடன் சத்தீஸ்கார் மாநில முதலமைச்சர் ராமன் சிங்கும் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், மோடியின் வருகைக்கு மாவோயிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவர்கள் பஸ்தார் முழுவதும் நாளை முதல் 2 நாள் முழுஅடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், கோண்டே என்ற கிராமத்தில் பானுபிரதாப்பூர்–பாகாகான்ஜோர் சாலையின் குறுக்கே மரங்களை வெட்டிப்போட்டு, தேச எதிர்ப்பு வாசகங்கள், பிரதமரின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க கோரும் வாசகங்கள் அடங்கிய பேனர்களையும் கட்டி இருந்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற காவல்துறையினர், அங்கிருந்த மரங்களை அகற்றியதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலப்படுத்தியுள்ளனர். மேலும், ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களை ஒட்டிய எல்லைகளும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.