செய்திகள்

எவரையும் நம்பி தமிழர்கள் போராட்டங்களை ஆரம்பிக்கவில்லை-வடகிழக்கில் ஹர்த்தால் பூரண வெற்றி

சாரங்கன் 

காணாமல்போன உறவுகள் தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என வலியுறுத்தி விடுவிக்கப்பட்ட ஹர்த்தால் போராட்டம் பெரும் வெற்றியளித்துள்ளது.

வடகிழக்கில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் உரிய பதிலை அரசாங்கம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி காணாமல்போனவர்கள் அமைப்பு வடகிழக்கில் இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அந்த அழைப்புக்கு சாதகமான முறையில் அரசியல் கட்சிகளும் வர்த்தக சங்கங்களும் சிவில் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து ஹர்த்தாலை வெற்றிபெற ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுத்திருந்தன.

இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் என்பது அதிகளவு தமிழர்களைக்கொண்டிருந்தபோதிலும் அந்த அமைப்பில் குறிப்பிட்டளவு முஸ்லிம் உறுப்பினர்களும் உள்ளனர். இந்த அமைப்பு தமிழ் முஸ்லிம் என்று எங்கும் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டது கிடையாது.

இந்த நிலையில் இன்று நடாத்தப்பட்ட இந்த ஹர்த்தால் தொடர்பில் கிழக்கில் சிலர் விமர்சனங்களை முன்வைத்துவருவது நோக்கப்படவேண்டியுள்ளது. கிழக்கினைப்பொறுத்தவரையில் இன்று ஹர்த்தால் என்பது பூரண வெற்றியாகவே நோக்கப்படவேண்டும். கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்தவரையில் தமிழர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்கப்பட்ட நிலையில் முஸ்லிம் பிரதேசங்களில் ஆதரவு வழங்கப்படவில்லை.

இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதனை அரசியல் ரீதியாக சிலர் சாயம் பூசி வேதனையில் உள்ள மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலான விமர்சனங்களை முன்வைத்துவருவதை காணமுடிகின்றது.DSC06604

இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தவர்கள் எங்கும் எந்த அரசியல் கட்சியினையோ எந்த அமைப்பிடமோ எந்தவித பேச்சுவார்த்தையினையும் நடாத்தவில்லை. அல்லது எந்த அமைப்புகளிடமும் கோரிக்கை விடுக்கவில்லை. பொதுவான ஒரு அறிவிப்பினைச்செய்து தமக்கு ஆதரவளிக்குமாறு கோரியிருந்தனர்.

ஆனால் அந்த அறிவிப்பினை ஏற்றுக்கொண்டு பொது அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் காணாமல்போனவர்களின் அமைப்பின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரியிருந்தனர்.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுடன் பேசவில்லை. எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை, பிரித்தாளும் தந்திரமா, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையா போன்ற பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இன்று வடகிழக்கில் இந்த ஹர்த்தால் போராட்டம் எவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டது என்று தெரியாதவர்களே இவ்வாறான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அத்துடன் வழமையாக வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் வர்த்தக நிலையங்களை பூட்டுகின்றனர். அன்றைய தினம் தமிழர்கள் இந்த ஹர்த்தாலைசெய்யவேண்டும் என்றும்  பொருத்தம் அற்ற வகையில் கூறுகின்றனர். அகிம்சை போராட்ட வழியில் சில தியாகங்களை செய்து இவருக்கு எதிராக போராடுகிறோமோ அபவர்களின் மனச்சாட்சியை தட்டுவதாகும். அதனைவிடுத்து நாங்கள் வெள்ளிக்கிழமைகளில் வர்த்தக நிலையங்களை பூட்டுகின்றோம் அன்று ஹர்த்தாலைசெய்யுங்கள், அப்போதுதான் நாங்கள் ஆதரவளிப்போம் என்று கூறுவதில்  எந்த அர்த்தமும் இல்லை.

இந்த போராட்டத்தினை தமிழர்கள் நடாத்தும் போராட்டம் என்று வைத்துக்கொண்டால் இந்த போராட்டம் மாபெரும் வெற்றியையே அந்த அமைப்புக்கு வழங்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தால் வெற்றியளிக்கவில்லையென்று கூறுபவர்கள் தங்களது குறுகிய மனப்பான்மையினையே வெளிப்படுத்தியுள்ளதாகவே நாங்கள் நோக்கவேண்டியுள்ளது.

தமிழர்களின்போராட்டத்திற்கு முஸ்லிம்கள் ஆதரவளிப்பார்கள் என்று ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே தமிழர்களிடம் இருந்ததே தவிர அவர்கள் ஆதரவளிப்பார்கள் என்ற உறுதியிருக்கவில்லை. கடந்தகாலத்தில் தமிழர்கள் மேற்கொண்ட போராட்டங்களுக்கு ஆதரவளித்ததில்லை.

ஆனால் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற அநியாயங்களுக்கு எதிராக முதல்முதலில் குரல்கொடுத்தவர்கள் தமிழர்கள் என்பதை இந்த ஹர்த்தால் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கும் எழுத்தாளர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

அம்பாறையில் புத்தர்சிலை வைக்கும்போது தமிழர்கள் வேடிக்கை பார்ப்பதாககவும் எழுதுகின்றனர். மட்டக்களப்பில் சிங்களவர்கள் விகாரை கட்டும்போதும் காணிகளை அபகரித்தபோதும் பெரும் போராட்டங்களை தமிழர்கள் செய்தபோது எந்த இடத்திலாவது ஒரு முஸ்லிம் அமைப்பு அதற்கு ஆதரவாக செயற்பட்டதாக பதிவிடமுடியுமா?

அம்பாறையில் மாணிக்கமடு பிரதேசம் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் அங்கிருந்த அதிகமான தமிழர்கள் அங்கிருந்து எவ்வாறு விரட்டப்பட்டார்கள் என்பது இவ்வாறு விமர்சனம் எழுதும் எழுத்தாளர்கள் எழுதியது உண்டா?

ஹக்கீம் மீதோ றிசாட் மீதோ முஸ்லிம்களின் அமைப்புகள் மீதோ முஸ்லிம்களின் பள்ளிவாய்ல்கள் மீதோ நம்பிக்கைகொண்டு தமிழர்கள் போராட்டத்தினை ஆரம்பிப்பதில்லையென்பதை இவ்வாறு விமர்சனங்களை எழுதுவோர் அறியாமல் இருப்பது அவர்களின் அறிவு தொடர்பில் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.