மேல் கொத்மலை நீர்தேக்க திட்டத்தில் மக்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யபடவில்லை என ஆர்ப்பாட்டம் (படங்கள்)
மேல் கொத்மலை நீர்தேக்கம் அமைக்கப்பட்டு 7 வருடங்கள் நிறைவு பெற்ற போதிலும் இம்மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் வழங்கப்படவில்லையென இம்மக்கள் இன்று காலை 10 மணி முதல் 12 வரை தலவாக்கலை மேல்கொத்மலை நீர் மின் திட்ட காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளில் சகல வசதிகளும் இருந்ததாகவும் அத்தோடு வீட்டிற்கு முன்பதாக போதியளவு இடம் இருந்ததாகவும் இத்திட்டம் ஆரம்பிக்கும் போது இம்மக்களிடம் சகல வசதிகளுடன் வீடு அமைத்து தருவதாகவும் தண்ணீர் வசதி வீட்டிற்கு முன்பதாக போதிய இட வசதி பெற்று தருவதாக கூறி இத்திட்டத்தை ஆரம்பித்ததாகவும் ஆனால் திட்டம் முடிவடைந்தும் இம்மக்களுக்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ள வீடு போதிய வசதி இன்மையாலும் இவ்வீடுகளில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இம்மக்கள் தெரிவித்தனர்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இம்மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் இம்மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்து இம்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதேவேளை சம்மந்தப்பட்ட காரியாலயத்தின் அபிவிருத்தி திட்ட அதிகாரியிடம் சம்மந்தப்பட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் சந்தித்து தங்களுடைய பிரச்சினைகளை முன்வைத்த போதிலும் குறித்த அதிகாரி இம்மக்களுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஆர்ப்பாட்டகாரர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மகஜர் மூலம் பல மணி நேரம் முயற்சித்து காத்திருந்து மீண்டும் குறித்த அபிவிருத்தி திட்ட அதிகாரியிடம் கையளித்தனர்.
அதன்பின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கலைந்து சென்றதோடு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றபடாத சந்தர்ப்பத்தில் மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கப்பபோவதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக சில ஊடகவியலாளர்கள் விபரங்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சேகரிக்க முயற்சித்த போதிலும் சம்மந்தப்பட்ட அதிகாரி ஊடகங்களுக்கு எவ்வித தகவல்களும் வழங்கமுடியாது என கூறியுள்ளமை குறிப்பிடதக்கது.








