யாழ்.குடாநாட்டில் நேற்றும் இன்றும் கடும் மழை: எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நீடிக்குமென தகவல் (படங்கள்)
யாழ்.குடாநாட்டில் நேற்றுப் பிற்பகல் கடும் மழை பொழிந்துள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமையும் (12.5.2015) சற்று முன்னர் 10.30 மணியளவில் கடும் மழை பொழிய ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாகப் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை தொடக்கம் மப்பும் மந்தாரமுமான காலநிலை நிலவிய நிலையிலேயே இன்றைய தினமும் மழை பொழிய ஆரம்பித்துள்ளது.
மழையின் போது காற்றுச் சற்றுப் பலமாக வீசியமையையும் அவதானிக்க முடிந்தது. மழை காரணமாகப் பலவிடங்களிலும், பல வீதிகளிலும் வெள்ளம் தேங்கிக் காணப்படுகிறது.
நேற்றுத் திங்கட்கிழமை பிற்பகல் 02.30 மணிக்குப் பெரும் இடிமுழக்கத்துடன் ஆரம்பித்த மழைவீழ்ச்சி சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக நீடித்தமையும் குறிப்பிடத்தக்கது.
முன்பருவ மழை காரணமாக மன்னார் குடா மற்றும் அதனுடன் இணைந்த தமிழ்நாட்டினதும் இலங்கையினதும் பிராந்தியங்களில் கடும் புயல் காற்றுச் சுழற்சியால் மழை வீழ்ச்சி அதிகரித்துக் காணப்படும்.
இச் சுழற்சி அடுத்த மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு இப் பிராந்தியங்கள் மிதமான மற்றும் கடுமையான மழையைப் பெற்றுக் கொள்ளுமென இலங்கையின் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
யாழ்.நகர் நிருபர்-









