செய்திகள்

யாழ். நிதிமன்றம் முன்பாக வெள்ளை வானில் மூவர் கடத்தல்: பொலிஸ் கைது என தகவல்

யாழ். நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையில் ஆஜராகி, பின்னர் வெளியில் வரும்போது வெள்ளை வானில் வந்தவர்கள், மூவரை பலவந்தமாக பிடித்து இழுத்து வானுக்குள் பலவந்தமாக தள்ளி, ஏற்றிக்கொண்டு சென்றமையால் அந்த வளாகத்தில் ஒருவகை பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் பின்னர், யாழ். நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான வழக்கு,  யாழ். நீதிமன்றில் இடம்பெற்றது. குறித்த வழக்கு விசாரணையில் 74 பேர், நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். அவ்வாறு ஆஜராகிவிட்டு, நீதிமன்றத்தை விட்டுவெளியேறும் போதே, வெள்ளை வானில் வந்தவர்கள், மூவரை மட்டும் பிடித்து இழுத்து வெள்ளை வானுக்குள் தள்ளி ஏத்தி, தலைமறைவாகியுள்ளனர்.

இதேவேளை, கொழும்பிலிருந்து வருகைதந்திருந்த குற்றத்தடுப்புப் பிரிவினரே அவர்களை, அழைத்துச்சென்றுள்ளதாக அறியமுடிகின்றது. எனினும், அத்தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. பலவந்தமாக ஏற்றிச் செல்லப்பட்ட கூறப்படும் நபர்கள், கடத்தப்படவில்லை என்றும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.
-06