யாழ் பல்கலைக் கழக வவுனியா வளாகத்தின் கற்றல் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் கற்றல், கற்பித்தல் இன்று (20.07) செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
கடந்த சனிக்கிழமை யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் ஏற்பட்ட முரண்பாடு தமிழ், சிங்கள மாணவர்களிடையே கைகலப்பாக மாறிய நிலையில் யாழ் பல்கலைக்கழகம் மற்றும் யாழ் பல்கலைக்கழத்தின் வவுனியா வளாகம் என்பவற்றில் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டு பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன் மாணவர்கள் மத்தியிலும் அமைதி நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாக மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் வழமை போல் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை, யாழ் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த வெளிமாவட்ட மாணவர்கள் வெளியேறியுள்ள நிலையில், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வவுனியா வளாக மாணவர்கள் தமது வீடுகளுக்கு செல்லாது தமது விடுதிகளிலேயே அமைதியாக கடந்த தினங்களில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






