யாழ். புங்குடுதீவில் காணாமற் போன மாணவி சடலமாக மீட்பு! நீதி கோரி சக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் நேற்றுக் கடத்தப்பட்ட மாணவியொருவர் இன்று வியாழக்கிழமை (14.5.2015) காலை பாழடைந்த வீடொன்றினுள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புங்குடுதீவு மகாவித்தியத்தில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் பாடசாலை விட்டதும் வீடு திரும்பிய மாணவி வீட்டுக்கு வராத நிலையில் அவரின் பெற்றோர் மாணவியைத் தேடியுள்ளனர்.
மாணவி கிடைக்காத நிலையில் புங்குடுதீவு 4 ஆம் வட்டாரம் கண்ணகி அம்மன் கோவில் பகுதியிலுள்ள பாழடைந்த வீட்டில் இன்றைய தினம் மாணவியின் சடலத்தைப் பொதுமக்கள் கண்டுள்ளனர்.
அவர்கள் ஊர்காவற்துறைப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாமெனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் இன்று சக மாணவர்களால் வீதியை மறித்துச் சுலோகங்கள் ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்.நகர் நிருபர்-









