யாழ் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கையெடுக்குமாறு சம்பந்தன் ஜனாதிபதியிடம் கோரிக்கை
யாழ் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற இரு இளைஞர்களின் மரண சம்பவம் தொடர்பாக இன்று திருகோணமலையில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றிற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினடம் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தனது கவலையை தெரிவித்ததோடு இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற இரு இளைஞர்களின் மரணம் தொடர்பில் இன்று திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அவர்களை நேரடியாக சந்தித்த எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தனது கவலையை தெரிவித்ததோடு இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்தோடு தொடர்புடைய பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பொலிஸ் மா அதிபரை கேட்டுக்கொள்ளுகிறது. இச் சம்பவம் தொடர்பில் இரா. சம்பந்தன் அவர்கள் பொலிஸ் மா அதிபரோடும் தொடர்பு கொண்டு இச் சம்பவம் தொடர்பில் தனது கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்ததோடு துரித கதியில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது தமது பிள்ளைகளை இழந்து துயரில் வாடும் குடும்பத்தாருக்கும் உற்றார் மற்றும் நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.- (3)




