செய்திகள்

யாழ் ரயில் நிலையம், பொது நூலகம் உட்பட நாடுபூராக 26 இடங்களில் நாளைமுதல் இலவச Wifi இன்டர்நெட்

நாளை முதல் தெரிவுசெய்யப்பட்ட 26 பொது இடங்களில் கம்பி இல்லா தொழில்நுட்பம் (Wifi ) மூலம் இலவசமாக இண்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று வெளிநாட்டலுவல்கள், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது.

மிக விரைவில் நாடு பூராகவும் 1000 இடங்களுக்கு இந்த சேவை விஸ்தரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இந்த சேவையை சம்பிரதாயபூர்வமாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க, வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர மற்றும் 6 அமைச்சர்கள் ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையம், புறக்கோட்டை பொது மற்றும் தனியார் பேருந்து நிலையம், ஸ்ரீ தலதா மாளிகை, புறக்கோட்டை மிதக்கும் சந்தை, கொழும்பு சட்டக் கல்லூரி, கொழும்பு பொது நூலகம், தெஹிவளை மிருகக்காட்சி சாலை, கொழும்பு குதிரைத் திடல், போலிஸ் தலைமையகம், காலி ரயில் நிலையம், யாழ் ரயில் நிலையம், கோட்டை டச்சு வைத்தியசாலை, காலி முகத்திடல், பத்திரமுல்லை நெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையம், கொழும்பு நூதனசாலை, கராப்பிட்டிய வைத்தியசாலை, இரத்தினபுரி நூதனசாலை, பொலனருவ ஆதார வைத்தியசாலை, மாத்தறை பேருந்து நிலையம், பொலணறுவ ரயில் நிலையம், மாத்தறை ரயில் நிலையம், மிரிஜாவில தாவரவியல் பூங்கா, யாழ் பொது நூலகம், கண்டி ரயில் நிலையம் மற்றும் பேராதனை ரயில் நிலையம் ஆகிய இடங்களிலேயே இந்த சேவை நாளை முதல் இலவசமாக கிடைக்கவிருக்கிறது.