யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூற இடமளிப்பதா? இல்லையா? : அரசாங்கம் ஆராய்கிறது
யுத்தத்தினால் இறந்தவர்களையும் நினைவு கூற இடமளிப்பது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
வரவு- செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் அங்கவீனமுற்ற படையினருக்கு வாழ்வதற்கு வழியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் யுத்தத்தினால் அங்கவீனமுற்ற எல்.ரி.ரி.ஈ இளைஞர்களும், இறந்தவர்களின் குடும்பத்தினரும் அநாதரவாக உள்ளனர். இவர்களும் மனிதர்களே அவர்களுக்குச் செய்ய வேண்டிய சேவை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
1971, 1988, 1989, 1990 கலவரங்களின்போது அரசாங்கத்துக்கு எதிராகப் போராடி இறந்தவர்களை நினைவுகூர இடமளிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது இறந்தவர்களை நினைவுகூர இடமளிப்பது குறித்து கவனம் செலுத்தி வருகிறோம். கலவரம், யுத்தங்களின் பின் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
வன்னி பிரதேசத்தில் வெற்றிடமாக உள்ள கிராம உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மோதல் ஏற்படாத வகையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். -(3)




