பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்றார் தெரேசா மே: பொரிஸ் ஜோன்சன் வெளிநாட்டு அமைச்சர்
பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள தெரேசா மே, சகல மக்களுக்குமான ‘ஒரு தேச ‘ அரசாங்கத்தை முன்னெடுத்து செல்லவிருப்பதாகவும் தனது பணி ‘ சிறந்த ஒரு பிரித்தானியாவை’ கட்டி எழுப்புவதே என்று சூளுரைத்திருக்கிறார்.
பிரித்தனிய மகாராணியினால் பிரதமராக இன்று நியமிக்கப்பட்ட பின்னர் டௌனிங் வீதியில் உள்ள பிரதமர் வாசஸ்த்தலத்தின் முன்பாக உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகியவற்றுக்கிடையே விலைமதிக்க முடியாத பிணைப்பு இருப்பதாக கூறினார். இவரது உரையின் போது கணவர் பிலிப் கூட இருந்தார்.
மார்கிரட் தட்சரின் பின்னர் பிரித்தானியாவின் 2 ஆவது பெண் பிரதமர் என்ற பெருமையை தெரேசா மே பெறுகிறார்.
பதவி விலகி செல்லும் டேவிட் கமரூனின் சேவையை வெகுவாக பாராட்டிய தெரேசா மே, அவரை ‘ சிறந்த , நவீன பிரதமர் ‘ என்று விமர்சித்தார்.
அம்பர் ருட் என்ற பெண் பாராளுமன்ற உறுப்பினர் உள்விவகார அமைச்சராகவும், முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜோன்சன் வெளிநாட்டு அமைச்சராகவும் தெரேசா மே யினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.







