லிந்துலையில் இரு வேறு வீதி விபத்துகளில் 23 பேர் படுகாயம் (படங்கள், வீடியோ)
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை லோகி தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்ற இரு வீதி விபத்துகளில் 23 பேர் படுங்காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
16.06.2015 அன்று பிற்பகல் வேளையில் நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற பஸ் வண்டி ஒன்றும் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற பவுஸர் வண்டி ஒன்றும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் பஸ்ஸில் பயணித்த 18 பேரும் பவுஸரின் சாரதியும் நடத்துனரும் படுங்காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பவுஸரின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக லிந்துலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மற்றுமொரு வாகன விபத்து அதே பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி இடம்பெற்ற பஸ் விபத்தினை பார்ப்பதற்காக சென்ற முச்சக்கரவண்டி விபத்து ஏற்பட்ட பிரதேசத்தில் வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. எனினும் லிந்துலை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற கார் ஒன்று குறித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் கார் வண்டியில் பயணித்த சிறுவன் உட்பட இரண்டு பேர் படுங்காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விரு விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=Rgm8daJyVKk&feature=youtu.be” width=”500″ height=”300″]












