வடக்கின் பிரச்சினைகளை ஆராய கிளிநொச்சியில் பிரதமர் அலுவலகம்: ரணில் அறிவிப்பு
வடமாகாணத்தில் காணப்படுகின்ற பிரச்சினை களை ஆராய்வதற்கும் தீர்ப்பதற்குமென கிளிநொச்சியில் பிரதமர் அலுவலகம் அமைக்கப் படவுள்ளது. இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து ஆலோசனை வழங்கு வதற்காக விசேட பிரதிநிதியொருவரும் நியமிக்கப்படவுள்ளார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் விசேட வேலைத் திட்டங்களை மேற்கொண்டு மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
வட பகுதிக்கான மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரத மர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீள்குடியேற்றம்,பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் அபிவிருத்தி,புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு செயற்றிட்டம், மற்றும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மீள்குடியேற்றம் புணர்வாழ்வு மற்றும் இந்து மதவிவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன்,செல்வம் அடைக்கலநாதன்,வினோநோதராகலிங்கம், மாவட்ட செயலாளார் சுந்தரம் அருமைநாயகம், திணைக்களங்களின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் போது யுத்தத்தின் பின்னரான சூழலில் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் பல பிரச்சினைகள் தொடர்பாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. குறிப்பாக மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றப்படாத நிலைமை, காணி உறுதிப்பத்திரங்கள் இன்மையால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வீட்டுத்திட்டங்கள் கிடைக்கப்பெறாமை, விவசாய நிலங்கள் விடுவிக்கப்படடாமை, மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார வசதிகள், புணர்வாழ்வு அழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் சமுகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் வாழ்வாதார உதவிகள் தொடர்பாக கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.
இவற்றைக் கவனத்திற் கொண்ட பிரமர் ரணில் விக்கிரமசிங்க அவை தொடர்பாக தீர்வை எட்டுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்:
“யுத்தததனால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர்களின் நலன்களை பாதுகாக்கும் தேசிய ரீதியிலான மத்திய நிலையத்தின் தலைமை அலுவலகம் கிளிநொச்சியில் அமைக்கப்படும். இதன் மூலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள்,பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களின் நலன்கள் பாதுகாக்கப்படவுள்ளன.
வட மாகாணத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளை ஆராய்வதற்கும் தீர்ப்பதற்குமாக பிரதமர் அலுவலகம் ஒன்றினை அமைக்கவுள்ளோம். அத்துடன் இங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து ஆலோசனை வழங்குவதற்காக விசேட பிரதிநிதியொருவர் நியமிக்கப்படவுள்ளார். இதன் மூலம் எதிர்காலத்தில் முன்னேற்றகரமான நிலைமைகளை நோக்கிச் செல்ல முடியும்” எனத் தெரிவித்தார்.




