வடக்கு, கிழக்கு இணைப்புக்கு செய்ய வேண்டியது என்ன ?
எஸ். பாலசுப்பிரமணியம்
1948.02.04 ஆம் திகதி இலங்கை சுதந்திரமடைந்த போது வடக்கும், கிழக்கும் நிலத் தொடர்பில் ஒன்றாகவே இருந்தன. இந்தியா, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு விடும் என்ற அச்ச உணர்வு சிங்கள ஆட்சியாளர்களிடமும் பௌத்த மத நிறுவனங்களிடமும் இன்றும் உண்டு. சிங்கள, பௌத்த மக்கள் வாழும் பகுதி மக்களின் எதிர்ப்பினால் சாத்தியப்படாது போனாலும் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு இந்தியாவுடன் இணைந்து ஒரு மாகாணமாகக்கூடும் என்ற அச்சம் சிங்களத் தலைவர்களிடம் அன்றும் இருந்தது இன்றும் உள்ளது. இத்தகைய அச்சத்தை அன்றைய பிரதமர் டி.எஸ். சேனநாயக்க சுதந்திரம் கிடைத்த காலத்தில் பிரித்தானிய முக்கியஸ்தர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டபோது அவர் அளித்த ஆலோசனை கேக்கை துண்டு துண்டாக வெட்டிச் சாப்பிடுவது போல கேந்திர முக்கியத்துவமுடைய கிழக்கு மாகாணத்தில் துண்டு துண்டாக சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதன் மூலம் பிரித்துவிட்டால் கிழக்கு இல்லாத வரண்ட வடக்கை இந்தியாவிற்கு தேவைப்படாது, என்பதே அந்த ஆலோசனையாகும்.
பிரதமர் சேனநாயக்கா இத் திட்டத்தை அமுல்படுத்த ஆரம்பித்துவிட்டார். கிழக்கைப் பிரித்து விடுவது என்ற கொள்கையை வகுத்து அதனை வெற்றிகரமாகச் செயற்படுத்தினார். யாரிடம் புத்தி கேட்க வேண்டும் என்பதும் யாருடைய புத்திமதியை மதிக்க வேண்டும் என்பதும் சிங்களத் தலைவர்களுக்குத் தெரியும். கிழக்கை துண்டாடும் இந்த செயற்பாட்டின் அடையாளமாக ஹொறவ பொத்தானையிலிருந்து திருகோணமலை வரையான சிங்களக் குடியேற்றங்கள் சிறிது தூரத்திற்கும் அதாவது ஒரு கி. மீ. வரையும் பின்னர் இடையில் தமிழர் குடியேற்றம் இவ்வாறு மாறி மாறி வழங்கப்பட்டுள்ளதை இன்று அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
பிரித்தாளும் தந்திரத்திற்கு இன்னுமொரு சிறு உதாரணம், டொனமூர் யாப்பின் கீழ் நிர்வாக சபை மூலம் அமைச்சர்களை தெரிவு செய்யும் முறை இருந்தது. 1936 ஆம் ஆண்டு தேர்தலின் பின்பு ஜி.ஜி. பொன்னம்பலத்தை அமைச்சரவையில் இடம்பெறாமல் செய்வதற்கு என்ன வழி என .பாரன் ஜெயதிலக்க ஒரு பிரபலமான தமிழ் மூளையிடம் புத்தி கேட்ட போது ” 50 பேர் கொண்ட அரசாங்க சபையில் ஜி.ஜி. பொன்னம்பலம் இடம்பெறும் குழுவில் நான்கு சிங்களவர்களையும் ஜி.ஜி. பொன்னம்பலத்துடன் மூன்று தமிழர்களையும் நியமித்தால் தமிழர் தலைவராக வரமுடியாது என அந்தக் கணித மூளை எண்கணித முறையில் பதிலளித்ததாம்.
1949 ஆம் ஆண்டளவில் கிழக்கைப் பிரிக்கும் நடைமுறையில் சேனாநாயக்க முன்னேறினார். இதன்படியாகவே கல்லோயாத் திட்டம் உருவாக்கப்பட்டு சிங்கள குடியேற்றம் இடம்பெற்றது. இதேவேளை வடக்கையும் கிழக்கையும் நிலத் தொடர்பிலிருந்து பிரிக்கும் நோக்கில் மணலாறு குடியேற்றத் திட்டத்தை வெற்றிகரமாக வகுத்து நடைமுறைப்படுத்தினார். அப்போதிருந்த தமிழ்த் தலைமைகளுக்கு இத் திட்டங்கள் கண்ணில், கருத்தில் பட்டிருக்கவில்லையா ? எமது தமிழ்த் தலைமைகள் அன்றும் இன்றும் “ரியூப் லைட்’ போன்றவர்கள். அதாவது ” சுவிச்சை ‘ப் போட்டதும் குழல்விளக்கு ஒளிராது சிறிது நேரம் மின்னிவிட்டு பிறகு தான் ஒளிரும்.
தமிழ்த் தலைவர்கள் மூளைகளை சட்டப் புத்தகங்களுக்குள்ளும் , கண்களை பணப்பெட்டகங்களுக்குள்ளும் புதைத்துக் கொண்டும் பகுதி நேர அரசியல் தலைவர்களாக விளங்கிய போது சிங்களத் தலைவர்கள் தமிழரின் தாயகத்திற்கான இருதய நிலப்பரப்பை தமிழ் அதிகாரிகளைப் பயன்படுத்தியே அறுத்துக் கொண்டு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளை சிங்கள அரசு மேற்கொண்ட போது எமது தமிழ் அரசியல்வாதிகளும் சட்ட மேதைகளுமான தந்தை செல்வநாயகம், ஜி.ஜி. பொன்னம்பலம், உடுப்பிட்டி சிவ சிதம்பரம், கோப்பாய் வன்னிய சிங்கம் போன்றோர் சேனநாயக்க , டட்லி சேனநாயக்க, சேர். ஜோன் கொத்தலாவலை, பண்டார நாயக்க போன்ற சிங்களத் தலைவர்களினால் ஒப்பந்தங்கள் மூலம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி இந்தியாவிடமிருந்து இலங்கையை பாதுகாக்கவும் வடக்கு, கிழக்கு நிலத் தொடர்பைத் துண்டிக்கவும் கிழக்கை சிங்களமயமாக்க சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டது. அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான சட்டங்களையும் அரசியல் யாப்புகளையும் உருவாக்கியது. 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம், 1961 ஆம் ஆண்டு நீதிமன்ற மொழிச் சட்டம், 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு இதில் சிங்கள மொழி, பௌத்த மதம் , பௌத்த சாசனம் போன்ற அரசியல் யாப்பு ஏற்பாடுகள் பலம் மிக்கவையாக இடம்பெற்றன.
புதிய அரசியல் யாப்பை எதிர் எதிர்கொள்கையுடைய ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜனாதிபதிக்கான 2015 ஆம் ஆண்டு தேர்தலிலும் அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலிலும் சிறுபான்மையினருக்கு வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஒன்றிணைந்து அமைத்துக் கெ õண்ட நல்லாட்சி அரசு மூலம் நடைமுறைப்படுத்த 2016 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சபையை அமைத்து அனைத்து அசரியல் கட்சிகளின் வழிநடத்தல் குழுக்களின் செயற்பாட்டில் இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டு 2/3 பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழரின் நீண்ட கால அபிலாஷையான சமஷ்டியும் வடக்கு, கிழக்கு இணைப்பிற்கும் அனுமதிக்கப்படவில்லை என்ற விடயங்கள் வெளிப்படையாகி விட்ட நிலையில் காணப்படும துயரமே பெரிது.
தமிழ்த் தலைவர்களிடம் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்கான மூலோபாயங்கள் இருப்பதில்லை. ஆனால், சிங்களத் தலைவர்கள் இதற்கு மாறாக நீண்ட கால கண்ணோட்டத்துடனும் அதற்கான மூலோபாயத்துடனும் செற்பட்டு வருகின்றனர். இதனை எவரும் மறுத்துரைக்க முடியாது. இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்த நாளிலிருந்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் விஸ்வாசமாக நடந்து கொள்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் சில விடயங்களில் அரசைக் கண்டித்தே ஆக வேண்டும்.
சம்பந்தன் ஒரு அரசாங்க எதிர்க்கட்சித் தலைவராக இயங்கவில்லை என்பது கூட்டு எதிரணியினரின் நீண்ட கால குற்றச்சாட்டு. இவற்றை விட புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களின் சம்பந்தனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். சம்பந்தன் எவர் முகத்தையும் ஏறிட்டுப் பார்த்தும் பேசமாட்டார். இவரது மௌனம் அல்லது மழுப்பல் பதில்கள் எதிரிகளை நோகடித்து வீழ்த்திவிடும். தான் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதன் முதன்மைக் கட்சியான தமிழரசுக் கட்சியையும் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடித்து யாருக்கும் பொறுப்போ, பதிவோ விளக்கமோ கொடுக்க மறுத்துச் செயற்படுகிறார். இதுமட்டுமல்லாது, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து செயற்படும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். புளொட் ஆகிய கட்சித் தலைவர்களுக்கு உரிய மதிப்பளித்து எடுக்கும் தீர்மானங்களுக்கு அவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதில்லை என்ற குறைபாட்டுடன் மேலும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி விசாரணையோ, நிவாரணங்களோ, தீர்வுகளோ கிடைக்கச் செய்யாத அரசியல் செய்து வருவதாகவும் குற்றஞ் சாட்டுகிறார்கள்.
மேலும் எதற்காகவும் போரிடும் ஆற்றல் சம்பந்தனிடம் இல்லை. இவர் வயது முதிர்ச்சியும் தளர்ச்சியும் அடைந்துவிட்டார். சமூகத்தைப் பற்றிய தேவைகளை ஊடகங்களுடன் ஆர்வமாக பேசக் கூட சக்தியற்றவராக இருக்கிறார். தமிழ் மக்களின் மிக முக்கியமான கால கட்டத்தில் அவரது இயலாமையைக் காணும் போது அவரை கட்சிகளின் தலைவராகவோ மிகுதிக்காலமான இரண்டரை வருடங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவராகவோ தொடரவைப்பது துரோகச் செயலாகும் என அரசியல் ஆய்வாளரின் குற்றச்சாட்டாகும்.
வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எவ்விதத்திலும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. காலம் சென்ற முஸ்லிம்களின் தலைவர் அஷ்ரப்பும் ஆதரவு தெரிவித்தவர். வடக்கு,கிழக்கு இணைக்கப்படும் போது முஸ்லிம்களுக்கான தனி அலகு ஒதுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் வைத்தார். இதுவே இப்போதும் எமது நிபந்தனையாகும். இது பற்றி தமிழ்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. நடந்து கொண்டும் இருக்கிறது. நீண்ட பேச்சுவார்த்தைகளும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் அவசியமாகும். வடக்கு, கிழக்கு இணையப் போகிறது என வடக்கு, கிழக்கில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் தமது அரசியல் இலாபம் கருதி திட்டமிட்டு முயற்சிக்கின்றனர். தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு குறுக்கே ஒருபோதும் முஸ்லிம் காங்கிரஸ் நிற்காது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
தமது அரசியல் தீர்வு பயணத்திற்கு பல இழப்புகளைச் சந்தித்து வந்துள்ள தமிழ் மக்கள், இன்று ஒருமித்த நாடு என்ற அரசியல் தீர்வின் கீழ் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ள வந்துள்ளமை பாரிய திருப்புமுனையாகும். எனவே, இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண முடியாதுவிடின் ஒருபோதும் தீர்வு காண முடியாது.
1995, 2000 ஆம் ஆண்டுகளில், எஃகிய என்ற சொல்லை நீக்கிவிட்டு ஐக்கிய என்ற சொல்லை வைத்து தீர்வுத் திட்டங்களை முன்வைத்த ஜீ.எல். பீரிஸ் இன்று இடைக்கால அறிக்கையை எதிர்த்துப் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு பிரச்சினை எழுந்தால் இலங்கைச் சட்டப் பிரகாரம் சிங்கள மொழியில் இருக்கும் சொல்பதத்தையே நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும். சிங்கள மொழியில் எஃகிய என்ற சொல் இருப்பதால் எந்தச் சட்டப் பிரச்சினையும் இல்லை. தற்போதைய இந்த இணக்கமான சூழ்நிலையை முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் தமது அரசியல் இலாபத்திற்காக குழப்பி விடாமல் நிரந்தர தீர்வைக் காண ஒத்துழைக்க வேண்டும். அவர்களின் இனவாத செயற்பாட்டை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும். இவ்வாறு அமைச்சர் டிலான் பெரேரா கோரிக்கை விடுத்தார்.
வடக்கு, கிழக்கு இணைப்புப் பற்றி அமைச்சர் மனோகணேசன் குறிப்பிடுகையில் ; இது தமிழ் பேசும் மக்களின் நீண்ட கால கனவு. இது எதுவித இடையூறுமின்றி நிறைவேற வேண்டும். 1987.11.14 ஆம் திகதி 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தின் பிரகாரம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவும் ஒப்பமிட்டு ஏற்றுக் கொண்ட ஒப்பந்தப் பிரகாரம் மாகாண சபைகள் சட்டத்தின் ஏற்பாட்டின் படி வடக்கு,கிழக்கு மாகாணங்கள் ஒரே அலகாக இணைக்கப்பட்டு திருகோணமலையில் மாகாண சபை அலுவலகம் அமைத்து இயங்கி வந்தது. இதன் போது முஸ்லிம் தலைமைகளால் எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கவில்லை. மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 2012 ஆம் , 2013 ஆம் ஆண்டு காலப் பகுதியில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டு தனி அலகுகளும் நடத்தப்பட்டன.
மேலும் அவர் குறிப்பிடுகையில் ; தற்சமயம் புதிய அரசியல் யாப்பிலும் இணைப்பு இடம்பெறவில்லை. வடக்கு, கிழக்கு இணைப்புக்கு பல முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான இலங்கை மக்கள் காங்கிரஸ், முன்னாள் அமைச்சரான அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் இராஜாங்க அமைச்சரான ஹிஸ்புல்லாக் ஆகியோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். கிழக்கில் மாறி மாறி வந்த அரசாங்கங்களின் திட்டமிட்ட செயற்பாடுகள் காரணமாக தமிழ், முஸ்லிம் சகோதரர்களிடையே முரண்பாடுகளும் மோதல்களும் இடம்பெற்றமையே எதிர்ப்புக்குக் காரணமாகும்.கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சி அமைந்திருந்தன.
வடக்கு இணைப்புக்கு இறுதியில் இரு மாகாண சபைகளினதும் பொது மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பு கோரப்படும். இதற்கு தமிழ் , முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாண பொது மக்களுக்கு வடக்கு, கிழக்கு இணைப்பினால் ஏற்படக் கூடிய நன்மைகள் பற்றி அடி மட்ட மக்களைச் சென்றடையக் கூடிய பத்திரிகைகள், கருத்தரங்குகள், துண்டுப் பிரசுரங்கள், மூலமான அறிவுபூர்வமான பிரசாரங்களை முன்னெடுப்பது அவசியம். இணைப்பை நிராகரிப்பவர்கள் மக்களை வாக்களிக்கச் செல்லவிடாது தடுத்தால் போதுமானது. ஆனால், இணைப்பிற்கு ஆதரவு கோருவோர் பல அனுசரணையான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி, மக்களைச் சென்றடையக் கூடிய செயற்பாடுகளை உயிரைப் பணயம் வைத்து செயற்பட்டால் மட்டுமே வெற்றியடைய முடியும்.




