வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் பற்றி விமர்ச்சிக்கும் முயற்சியில் சுரேன் ராகவன் ஈடுபட வேண்டாம் – சிவாஜிலிங்கம்
சுரேன் ராகவன் எம்பி தான் வந்த வேலையை பார்க்காமல் எம்மை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் தற்போதைய அரசின் தேசிய பட்டியல் எம்பியுமான சுரேன் ராகவன் தன் வேலையை பார்க்காமல் இனப்படுகொலை செய்த மொட்டு கட்சியில் இருந்து வந்து இப்பொழுது எங்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.தமிழ் கட்சிகளினுடைய தலைவர்கள் எல்லோரும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும், தவறாக செயற்படுகிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.
நேற்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில் சுரேன் ராகவன் தான் வந்த வேலையை பார்க்காமல் எம்மை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். தமிழ் கட்சிகளினுடைய தலைவர்கள் எல்லோரும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். அவர்கள் தவறாக செயற்படுகிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.
நான் ஒன்றைகேட்க விரும்புகின்றேன், நீங்கள் வடக்கு மாகாண ஆளுநராக இருந்த போது மக்களே உங்களுடைய குறைபாட்டை தாருங்கள் நான் அதை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கிறேன் என்று கூறினீர்கள்.ஆனால் நான் உட்பட பலர் கொடுத்த குறைபாடுகளை குப்பை கூடையில் போட்டாரோ என தெரியவில்லை. இப்பொழுது அரசியல் கைதிகளை விவகாரத்தை பற்றி பரிசீலிப்பதற்கு 9 மாதங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார் என்றார்.
சுரேன் ராகவன் விரும்பினால் வடக்கில் தேர்தலில் போட்டியிடலாம் மக்கள் ஆதரவு இருந்தால் வெல்லலாம் அல்லது உங்களுடைய பூர்வீகமான இடத்தில், கொழும்பில் போட்டியிடலாம். அது அவருடைய விருப்பம் எனினும் வடக்கு – கிழக்கு மக்களுடைய பிரதிநிதிகள் பற்றி விமர்ச்சிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்.இல்லையேல் அவரைப் பற்றி நாங்கள் இன்னும் பல விடயங்களை சொல்ல வேண்டிவரும். அவருடன்நேரடியான விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆகவே அவருடைய விமர்சன கருத்துக்களை இத்துடன் நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.(15)




