செய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களை சிங்கள மயமாதலில் இருந்து தடுக்கவும் – இந்தியாவை வலியுறுத்தும் திருமாவளவன்

பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தால் ஈழத்தமிழர்களின் விவகாரத்தில் கொள்கை மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் கடந்த எட்டு ஆண்டுகளில் ஈழத்தமிழர்ளின் விடயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தொல்.திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.அதேநேரம், ஐ.நா.வில் சிங்கள,பௌத்த அரசுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, இந்தியா அதில் பங்கேற்கவில்லை என்றும் இந்தியா, தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சிங்கள, பௌத்த பேரினவாத அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் போக்கை கைவிட்டு ஐ.நாவிலும் இதர தளங்களிலும் இந்தியா தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அவர் இந்திய அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சிங்கள மயமாதலில் இருந்தும் தமிழர்களின் கைகளில் இருந்து பறிபோவதை தடுக்கவும் காணமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. கூட்டத்தொடர் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நடைபெற்றாலும், அதன் மூலம் இதுவரை ஈழத் தமிழர்களுக்கு எவ்விதமான தீர்வும் கிடடவில்லை என திருமாவளவன் கவலை வெளியிட்டுள்ளார்.13ஆவது திருத்ததின் படி, முழுமயான அதிகார பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்த தமிழகத் தலைவர்கள் மூலமாக மாநில, மத்திய அரசாங்கங்களை கோரும் விசேட மாநாடொன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டின் பின்னர் சென்னை பத்திரிகையாளர் மன்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.(15)