வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகள் சாகும்வரை உண்ணாவிரதம்
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் போனோரின் உறவுகள் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா கந்தசாமி ஆலயம் முன் ஒன்றுகூடிய காணாaமல் போனோரின் உறவகள் அங்கு விசேட வழிபாட்டை மேற்கொண்டதுடன் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று வவுனியா தபால்நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், சிறீலங்கா அரச படைகள் மற்றும் அரச துணை ஆயுதகுழுக்களால் எமது உறவுகள் கடத்திச்செல்லப்பட்டமையை கண்கண்ட சாட்சிகளாக நாம் உள்ளோம். அரசினால் நியமிக்கப்பட்ட பலதரப்பட்ட ஆணைகுழுக்கள், உள்ளூர் மற்றும் சர்வதே மனித உரிமை அமைப்புகள், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், தமிழ் மக்களின் அரசியல் அதிகாரம் பெற்றுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு, சர்வதேச சமுகம் என்று சகல தரப்புகளிடமும் முறையிட்டும், வருடங்கள் பல கடந்த நிலையிலும் எமது உறவினர்கள் விடுவிக்கப்படவில்லை.
இந்தநிலையில், சாத்வீக ரீதியாக சகல கவனவீர்ப்பு மற்றும் அழுத்த போராட்டங்களை நடத்தியும், எமது உறவினர்கள் தொடர்பில் உரிய தீர்வு எமக்கு வழங்கப்படவில்லை. இதன்காரணமாகவே உரிய பதிலை வழங்குமாறு கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.
இதன்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்காக பந்தல் அமைக்கப்பட்ட போது உண்ணாவிரதம் மேற்கொள்ள முடியும், வீதி ஓரத்தில் பந்தல் அமைக்க முடியாது. அது போக்குவரத்திற்கு இடைஞ்சலாக அமையும் என கூறி தடுத்து நிறுத்தினர். இதன்போது அவ்விடத்திற்கு வந்த வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோரின் பொலிசாருடன் பேசி பந்தல் அமைக்க அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில் நகரசபை அனுமதி வழங்கினால் அமைக்க முடியும் என பொலிசார் தெரிவித்ததையடுத்து அவ்விடத்திற்கு வந்த நகரசபைச் செயலாளரிடம் பந்தல் அமைக்க அனுமதி கோரப்பட்டிருந்தது. போக்குவரத்திற்கு இடையூறு இல்லாது பந்தல் அமைக்குமாறு அவர் அனுமதி வழங்கியதையடுத்து பந்தல் அமைக்கப்பட்டு உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெறுகிறது.
இவ் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் எனப்பலரும் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

N5




