ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை அவதூறாக பேசிய அமைச்சர் றிசாட் பதியுதீன்
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் றிசாட் பதியுதீன் அரச அதிகாரிகள், ஊடகங்கள் முன்னிலையில் அவதூறாக பேசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பது எனவும் அதற்குரிய வேலைகளை இரு வராங்களுக்குள் ஆரம்பிக்காது விடின் தாண்டிக்குளம் காணியை வழங்குவது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற மற்றும் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள் முடிவெடுத்துள்ளதாக இணைத்தலைவரான செல்வம் அடைக்கலநாதன் அது தொடர்பில் தம்மால் எழுதப்பட்டிருந்த கடிதத்தை வாசித்தார். இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ஓமந்தையில் அமைப்பது என நீங்கள் எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவா எனக் கோட்டார். இதன்போது அந்தக் கடிதத்தில் எல்லோரும் தான் சேர்ந்து எழுதியிருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் தெரிவித்தனர். இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ‘உது என்ன ஒன்றுமில்லாத மொட்டைக்கடிதம் மாதிரி இருக்கு’ என விமர்சித்தார். இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ‘அமைச்சர் எம்மை இம்சைப்படுத்தக் கூடாது’ எனக் கூறி ஏதோ முணுமுணுத்தார்.
இதன்பின், அரச கட்டிடங்கள் சில மக்கள் பிரதிநிதிகளிடம் இருப்பது குறித்து மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதன்போது அமைச்சர் றிசாட் பதியுதீன் தன்வசம் வைத்துள்ள அரச கட்டிடத்தை (சேக்கிற் பங்களா) விடவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். அவர் தான் சம்மந்தப்பட்ட அமைச்சருடன் பேசி தமது அமைச்சின் கரியாலயமாக அதை பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்குரிய வாடகையை செலுத்தப் போவதாகவும் தெரிவித்தார். இதன்போது குறுக்கிட்ட சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி அமைச்சருடன் பேசி முடிவெடுப்பது என்றால் பிறகு எதற்கு இந்தக் கூட்டம். இங்கு முடிவு எடுப்போம் எனத் தெரிவித்தார். குறுக்கிட்ட அரைமச்சர் றிசாட் ‘ நீங்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். என்ன கதைக்கிறது, என்ன கதைக்கூடாது என தெரியாமல் இங்கு வந்து கதைக்கக் கூடாது’ எனத் தெரிவித்தார். இதன்பின் இருவரும் சில நிமிடங்கள் கடும் வாய்தர்க்கத்தில் ஈடுபட்ட போது அரச அதிபர் குறுக்கிட்டு அந்த பிரச்சனையை சமரசம் செய்து வைத்தார்.
இதேவேளை, ஊடகங்களே இனவாதமாக செய்திகளை வெளியிட்டு குழப்பங்களை ஏற்படுத்துகிறது எனவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் கடிந்து கொண்டார்.
N5




