வவுனியா வடக்கில் ஒரே ஒரு 9A: பெற்றோரை இழந்து அம்மம்மாவின் அரவணைப்பில் மாணவி சுலஸ்சனா சாதனை
கடந்த வருட இறுதியில் நடைபெற்று தற்போது வெளியாகிய கல்விப் பொதுசாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் தாய், தந்தையரை இழந்த நிலையில் அம்மம்மாவின் அரவணைப்பின் கீழ் கல்வி கற்று வந்த வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி ம.சுலஸ்சனா 9ஏ பெற்று சாதனை படைத்துள்ளார்.
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இந்த மாணவி மட்டுமே 9 ஏ பெற்று சாதனை படைத்துள்ளதுடன், கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் வவுனியா வடக்கில் பெறப்படும் சிறந்த பெறுபேறு இம் மாணவியின் பெறுபேறு ஆகும்.
இது குறித்து அந்த மாணவி தெரிவிக்கையில்,
நான் சிறு வயதிலேயே எனது அம்மா, அப்பாவை இழந்து விட்டேன். அம்மம்மாவின் அரவணைப்பிலேயே வளர்ந்தேன். ஆரம்ப கல்வி தொடக்கம் புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் பல்வேறு குடும்ப கஸ்ரங்களுக்கு மத்தியில் கற்று இன்று இந்த பாடசாலை முதலாவது 9 ஏ சித்தியை பெற்றுள்ளதுடன், வவுனியா வடக்கு வலயத்திலும் நான் மட்டுமே இம் முறை 9ஏ பெறுபேற்றைப் பெற்றுள்ளேன். அதற்கு எனக்கு வழிகாட்டிய எனது ஆசிரியர்களுக்கும், என்னை அரவணைத்து நான் படிக்க உதவிய எனது அம்மம்மா மற்றும் சித்தி ஆகியோருக்கும் எனது நன்றிகள்.
நான் உயர்தரத்தில் விஞ்ஞானத் துறையில் கல்வி கற்று வைத்தியராக வரவேண்டும் என்பதே எனது இலட்சியம். கடந்த காலத்தைப் போல் எவ்வாறான கஸ்ரம் வந்தாலும் நான் கடுமையாக முயற்சி செய்து படிப்பேன் எனத் தெரிவித்தார்.
N5




