செய்திகள்

வாகரையில் விகாரை அமைப்பதற்கான அனுமதியை எவ்வாறு கோரமுடியும்? யோகேஸ்வரன் கேள்வி

வாகரை காயான்கேணியில் பௌத்த விகாரை அமைப்பதற்கான அனுமதியை அரசாங்க அதிபர் எவ்வாறு கோர முடியும் அது பௌத்த விகாரை அமைந்த இடமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு புத்தசாசன அமைச்சுக்கு வாகரை காயான்கேணியில் பௌத்த விகாரை அமைப்பதற்கான அனுமதி கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

வாகரை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட காயான்கேணி பகுதியில் முன்னர் இராணுவம் குடியிருந்தபோது இராணுவம் தனது வழிபாட்டிற்காக சிறு புத்தர்சிலையை வைத்து வழிபாடு செய்து வந்தது.

நல்லாட்சி என்று சொல்லப்படும் இந்தக்காலகட்டத்தில் அண்மையில் திடீரென தம்பலகாமத்தில் இருந்து வந்த இரண்டு பௌத்தபிக்குகள் அங்கிருக்கின்ற பொளத்த சிலைக்கு அருகாமையில் கொட்டகைகளை அமைத்து தாங்கள் இங்கு இருக்கப்போகின்றோம் என்று வலியுறுத்தி இருந்துகொண்டு இருக்கின்றனர்.

இந்த பகுதி வாகரை பிரதேச செயலாளரினால் வாகரை பிரதேச சபைக்கு கடைத்தொகுதி அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட பிரதேசமாகும்.

அந்தப் பகுதியில் இவர்கள் அத்துமீறி வந்து தாங்கள் விகாரை அமைக்கப்போகின்றோம், இங்கு இருக்கப்போகின்றோம் என்று இருக்கின்றார்கள்.

அதற்கு அண்மித்த சில பகுதியிலே உதாரணமாக ஓட்டமாவடிக்கு அண்மித்த பகுதியில் இருக்கின்ற தியாவெட்டுவான் என்ற பிரதேசத்தில் முன்பு சிங்கள மக்கள் இருந்தார்கள். அங்கு விகாரை ஒன்று இருக்கின்றது. அந்த விகாரைக்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இந்த பௌத்த பிக்குக்கள் அங்கு சென்று இருக்கலாம்.

அதைவிடுத்து எந்த சிங்கள மக்களும் இல்லாத பகுதியில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் பொளத்தவிகாரை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

காயான்கேணியில் 99 வீதம் தமிழ் மக்கள் வாழும் பகுதி அங்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் தான் வாழ்கின்றார்கள் அங்கு விகாரை அமைப்பதற்கு திட்டமிடுகின்றனர்.இது தொடர்பாக அரசாங்க அதிபருக்கும் பிரதேச செயலாளாருக்கும் மடல் அனுப்பியுள்ளேன்.

உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி வாகரை பிரதேசத்தின் பிரதேச அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர் என்ற வகையில் பிரதேச செயலாளரை உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன். அதன் நிமிர்த்தம் இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படுகின்றது.

இந்நிலையில் திடீரென மாவட்ட செயலாளரிடம் இருந்து எனக்கு ஒரு மடல் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கொழும்பு புத்தசாசன அமைச்சக்கு மாவட்ட செயலாளர் ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் காயான்கேணி பௌத்த விகாரை அமைந்த இடத்திற்கு அரச அனுமதியை பெற்றுத்தரக் கோரல் என்று உள்ளது. அது எவ்வாறு பௌத்தவிகாரை அமைந்த இடமென்று சொல்வார்கள்?

நாங்கள் கொழும்பில் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் எல்லாம் கொண்டு இந்து கடவுளின் சிலைகளை வைத்துவிட்டு அங்கெல்லாம் ஆலயங்களை அமைத்து தாருங்கள் என்றால் அமைத்து தருவார்களா?ஏன் நியாயத்தை மீறி மாவட்ட செயலாளர் இவ்வாறான கடிதத்தை அனுப்பியுள்ளார். அவ்வாறு அனுப்ப முடியாது இந்த கடிதத்தில் மாவட்ட செயலாளருக்காக மேலதிக அரசாங்க அதிபர் கையொப்பமிட்டுள்ளார்.

அந்த இடம் பௌத்தவிகாரைக்கு உரிய இடமில்லை. இராணுவம் தான் இருந்த இடத்திலெல்லாம் தான் வழிபடுவதற்கென சின்ன பௌத்த புத்தர் சிலைகளை வைத்திருக்கின்றது. அதற்காக அந்த இடத்தையெல்லாம் பௌத்த விகாரைகளாக மாற்றமுடியுமா?

இது குறித்து மாவட்ட செயலாளருக்கும் மேலதிக உதவி அரசாங்க அதிபருக்கும் நன்கு தெரிந்தும் ஏன் இவர்கள் இவ்வாறு செய்கின்றார்கள் என்று தெரியவில்லை.

நாங்கள் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் பௌத்தவிகரை அமைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால் இந்து கிறிஸ்தவ மக்கள் வாழும் பகுதியில் திட்டமிட்டு பொளத்த விகாரைகளை ஏற்படுத்துவதற்கு சில பௌத்தபிக்குகளும் சில இனவாத பௌத்தபிக்குகளும் பின்னனியாக இருந்து செயற்படுகின்றனர்.

இதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதற்கு அரசாங்க அதிபரோ மேலதிக அரசாங்க அதிபரோ துணைபோகக் கூடாது.

அரசாங்க அதிபரின் இந்த மடல் சார்பாக நான் மிகுந்த வேதனையடைகின்றேன். ஆனால் அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுனரினால் அனுப்பப்பட்ட கடிதம் எனக்கு அனுப்பப்படவில்லை. அரசாங்க அதிபரினால் அனுப்பப்பட்ட கடிதம் மட்டுமே எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே உடனடியாக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளோம். வாகரை காயான்கேணியில் திட்டமிட்ட பௌத்தவிகரை அமைக்கும் செயற்பாட்டை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம். இதற்கு ஒரு போதும் அனுமதிவழங்க கூடாது என தெரிவித்தார்.
R-06