செய்திகள்

இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி

இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாகவும், தங்கள் அரசின் அனுமதியை பொறுத்தே போட்டியில் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷஹாரியார் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் “பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சென்று 20 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்க அரசு அனுமதி கொடுத்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்யும்படி ஐ.சி.சி.-யை கேட்டுக்கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி விலகினால் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அபராதத் தொகை கட்ட நேரிட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.