76 போட்டிகள், 6 வருடங்களுக்குப் பிறகு…: தோனி, ரெய்னாவின் புதிய டி20 பெருமைகள்!
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.இந்தப் போட்டியில் இந்திய வீரர்களான தோனி, ரெய்னா ஆகிய இருவருமே அரை சதம் எடுத்தார்கள். இதில் ஒரு முக்கியத்துவம் உள்ளது.ரெய்னா, 45 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆதில் ரஷித் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி 39 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டியில் அரை சதம் விளாசியுள்ளார் ரெய்னா. கடைசியாக 2010-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக அரை சதம் எடுத்தார். அதன்பிறகு 38 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அவர் அரை சதம் எடுத்துள்ளார்.நேற்று அதிரடியாக விளையாடிய தோனி, 36 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இது 76 டி20 போட்டிகளுக்குப் பிறகு தோனி எடுக்கும் முதல் அரை சதமாகும். இதற்கு முன்பு வேறு எந்த வீரரும் முதல் அரை சதத்துக்கு இத்தனை போட்டிகள் காத்திருக்கவில்லை. அயர்லாந்தின் கேரி வில்சன் தனது முதல் அரை சதத்தை 42-வது போட்டியில் எடுத்தார். அதுவே சாதனையாக இருந்தது. இப்போது தோனி அவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டார்.