வீதியின் இரு பக்கமும் உடல்கள் பறந்தன- நீஸ் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்
அசுர வேகத்தில் வந்த கனரக வாகனமொன்று மக்களை நசித்தபடி சென்றது என பிரான்ஸின் நீஸ் நகரில் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து அப்பகுதியில் காணப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட வடஅயர்லாந்தை சேர்ந்த படி முல்டன் என்பவர் எங்கிருந்தோ கனரக வாகனமொன்று மக்களை மிதித்து தள்ளிக்கொண்டு சென்றது என குறிப்பிட்டுள்ளார்.
எங்களிற்கு எதிரில் உள்ள வீதி தடையிலிருந்து அந்த வாகனம் வந்தது. அதன் பின்னர் அலறல்களையும் கதறல்களையுமே கேட்க முடிந்தது. அப்பகுதி முழுவதும் குழப்பகரமானதாக காணப்பட்டது. மக்கள் எந்த திசையில் ஓடுவது என தெரியாமல் ஓடத்தொடங்கினர். எங்களிற்கு என்ன நடக்கிறது, ஏன் அவ்வாறு நடக்கின்றது என்பது புரியவில்லை. நானும் எனது காதலியும் உணவுவிடுதியின் பின்புறமாக பாதுகாப்பான இடத்திற்கு சென்றோம். என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நீஸ்ப் பகுதியில் காணப்பட்ட டேமியன்அலமென்ட் என்ற பிரான்ஸ் செய்தியாளர் வாணவேடிக்கைகள் முடிந்த கையோடு குறிப்பிட்ட கனரக வாகனம் வந்தது. நினைத்துப்பார்க்க முடியாத வேகத்தில் அது வந்தது. எவ்வளவுபேரை கொல்லமுடியுமோ அவ்வளவு பேரைகொல்வதே அதனை செலுத்திவந்தவரின் நோக்கம். வீதியின் இருபக்கமும் உடல்கள் பந்துகளை போன்று பறப்பதை நான் கண்டேன். என்வாழ்நாளில் கேட்க விரும்பாதா அலறல்களை அழுகுரல்களை நான் கேட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீஸ் பகுதியில் காணப்பட்ட அப்பகுதியை சேர்ந்த ஓருவர் வீதியில் படுகொலை இடம்பெற்றது. நான் எல்லா இடங்களிலும் உடல்களை கண்டேன் என தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட வாகனம் ஓரு இடத்தில் நின்றதும் வாகனச்சாரதி எவ்வாறு கீழே இறங்கி துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டார் என்பதையும் அவர் வர்ணித்துள்ளார்.
குறிப்பிட்ட வாகனம் எங்குவருகிறது எங்கு செல்கின்றது என்பது அனுமானிக்கமுடியவில்லை. எனக்கு அருகில் இருந்த எனது மனைவி கொல்லப்பட்டார். அது மரங்கள் தூண்கள் என அனைத்தையும் நொருக்கிக்கொண்டு சென்றது. நாங்கள் ஓருபோதும் அவ்வாறான ஒன்றை பார்த்ததில்லை. சிலர் வாகனத்தின் கதவில் தொங்கியபடி அதனை நிறுத்த முயன்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட டருபிவாகிட் மொஸ்டா கைவிடப்பட்ட பொம்மை மற்றும் குழந்தைகளுக்கான தள்ளுவண்டி ஆகியவற்றின் படங்களை முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த பயங்கர சம்பவம் இடம்பெற்றதும் வெளியே வந்த நான் உடல் ஓன்றின் மீதே காலை வைத்தேன். இங்கு நிலைமை பயங்கரமாக காணப்படுகின்றது. போர்க்களம் போன்று அப்பகுதி காணப்படுகின்றது. கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் வாகனம் சிதைத்துள்ள அந்த உடல்களை பிடித்தபடி அமர்ந்திருக்கின்றனர். அவர்களை சமாதானப்படுத்தக்கூட முடியாமலுள்ளது என தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பகுதியை பொலிஸார் தற்போது முற்றாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். அந்த நகரம் மூடப்பட்டுள்ளது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்ற பகுதியில் சிக்குண்ட லண்டனை சேர்ந்த சட்டத்தரணியொருவர் அச்சமடைந்த பிள்ளைகளுடன் நீஸ் வீதிகளில் ஓடியது பயங்கர அனுபவம் என தெரிவித்துள்ளார். இதேவேளை சுதந்திர தினக்கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக அப்பகுதிக்கு சென்றிருந்த அமெரிக்க பிரஜையொருவர் முழு நகரமும் அச்சத்தால் ஓடியது என குறிப்பிட்டுள்ளார்.








